கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், குழந்தைகளும் ஒரு பக்கம் தவித்துக் கொண்டிருக்க, வைரஸை தடுப்பதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும், காவல் துறையினரும் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்க, இந்த வைரசை எப்படி அழிப்பது என்று தெரியாமல் விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக கஷ்டப்பட்டு கொண்டிருக்க, கொரோனாவின் கோரத்தாண்டவம் மட்டும் இன்னும் கட்டுக்குள் அடங்காமலேயே சுற்றி திரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரானா வைரஸ் வேகமாக பரவி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையின் முன்பு செவிலியராக பணியாற்றும் தாயும், அந்தத் தாயின் குழந்தையும், பிரிந்து நின்று, தவிக்கும் பாசப் போராட்ட சம்பவம், அனைவரது கண்களையும் கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை பற்றிய விரிவான பதிவு.
பெலகாவி மாவட்டத்தில் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா. 31 வயதான இந்தப் பெண் பெலகாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக தனது பணியை 4 ஆண்டுகளாக செய்து வருகின்றார். சுனந்தாவுக்கு மூன்று வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார்.
கர்நாடகாவில் கொரானா வைரஸின் பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால், அந்த மாநிலத்தில் இருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் 15 நாட்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் மருத்துவமனையிலேயே இருந்து தங்களது பணிகளை செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சுனந்தாவும், தன்னுடைய வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் மூலம் வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா தினம்தோறும் தனது தாயை பார்க்க வேண்டும் என்று அழுதபடியே இருந்துள்ளார். அந்தக்குழந்தை தினம்தோறும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் அழுத வண்ணமே இருந்துள்ளது. ஐஸ்வர்யாவின் அழுகையை எப்படி நிறுத்துவது என்று புரியாமல் தவித்த தந்தை, நேற்று தனது மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார்.
குழந்தை ஐஸ்வர்யாவை மருத்துவமனைக்கு அழைத்து வருவதாகவும், தன் மனைவிக்கு தொலைபேசியின் மூலம் முன்கூட்டியே தகவலை தெரிவித்தார். ஆனால் சுனந்தாவோ, கொரோனா சிறப்பு வார்டில் செவிலியராக பணியாற்றி வருவதால், தூரத்தில் நின்றபடியே, ‘குழந்தையை, தாய்க்கு காட்டினார்.
15 நாட்களாக தாயை காணாமல் தவித்து வந்த அந்த குழந்தையால் தன் தாயின் ஸ்பரிசத்தை கூட நுகர முடியவில்லை. தள்ளி நின்றபடியே இருந்த குழந்தை ஐஸ்வர்யா!, தன் அம்மாவைப் பார்த்து, வீட்டிற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தி, கதறி அழுத காட்சி அங்குள்ளவர்களின் அனைவரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விட்டது.
தனது குழந்தையின் கூப்பிட்ட குரலுக்கு செல்ல முடியாமல் தவித்து நின்ற தாயும் கண் கலங்கி நின்றதை வார்த்தையால் சொல்லி விட முடியாது. இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுயநலம் பாராமல், தன் குடும்பத்தை கூட பார்க்காமல், அடுத்தவர்களின் நலனுக்காக பாடுபடும் சுனந்தாவைப் போல் இருக்கும் ஆயிரக்கணக்கான செவிலியர்களுக்கும், ஐஸ்வர்யா போல் இருக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கும் எப்படி நன்றிக் கடனை தெரிவிப்பது? நம்முடைய இந்த கண்ணீர் மட்டுமாவது சமர்ப்பணம் ஆகட்டும்.
அதன் வீடியோ இதோ
3 year old daughter of a nurse cries to b with her mother outside d hotel & she asked her mother 2 come near 2 her. as per the source, Nurse didn’t go home from 15 days.
This incident took place at Belagavi, Karnataka.
Isn’t it heart touching? 😪#ThankYouCoronaWarriors pic.twitter.com/vKqd9rj575
— Shruthi Thumbri 🇮🇳 (@Shruthi_Thumbri) April 8, 2020