
பொதுவாகவே பித்ரு பூஜை செய்யும் பொழுது பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதை நாம் வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்தால் பித்ருக்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. இப்படி இருக்கையில் அகத்திக் கீரையை கொடுக்கும் பொழுது சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அவ்வகையில் யாரெல்லாம் அகத்திக்கீரை கொடுக்கலாம்? யார் கொடுக்கக்கூடாது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் இப்பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் பொழுது பித்ருகளுடைய மனம் முழுமையாக மகிழ்வடைந்து நமக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கின்றனர். ஒரு மனிதன் இறந்த பின்பு மேலோகத்தில் முதல் உணவாக அகத்திக்கீரை சமைத்து கொடுப்பார்களாம். இதற்கு சான்றாக இறந்து போனவர்கள் திடீரென சடங்கு செய்யும் நேரத்தில் உயிர்பித்து வரும் பொழுது பெரும்பாலான இடங்களில் அவர்கள் கீரை கீரையாக வாந்தி எடுப்பதை பலரும் பதிவிட்டுள்ளனர்.
பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுப்பது ஆகப்பெரும் புண்ணியத்தை கொடுக்கக் கூடியது. தாய் அல்லது தகப்பன் இல்லாதவர்கள் தான் பசுவிற்கு அகத்திக் கீரையை கொடுக்க வேண்டும். அம்மா அல்லது அப்பா யாராவது ஒருவர் இல்லாவிட்டாலும் நாம் பசுவிற்கு தாராளமாக அகத்திக் கீரையை கொடுக்கலாம், ஆனால் இருவரும் இருக்கும் பொழுது அகத்திக் கீரையை பசுவிற்கு தானம் செய்வது நல்லதல்ல.
அதற்கு பதிலாக பசுவிற்கு மற்ற எல்லா வகையான கீரை வகைகளையும், வாழைப்பழம், தீவனம், பச்சரிசி வெல்லம் கலந்த உணவு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம் தவறில்லை, ஆனால் அகத்திக் கீரையை பெற்றோர் உயிருடன் இருக்கும் பொழுது தானம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் சிறு குழந்தைகளும் அவர்களுடைய கைகளால் பசுவிற்கு அகத்திக் கீரையை கொடுக்கக் கூடாது. அகத்திக்கீரை கொடுப்பவர்கள் அமாவாசை தினங்கள், பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் தினங்கள் மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் சமயங்களிலும், மற்ற பித்ரு வழிபாடுகளிலும் தவறாது கொடுத்தல் வேண்டும்.
ஒவ்வொரு முறை பித்ரு வழிபாடு செய்யும் பொழுதும் அகத்திக் கீரையை பசுவிற்கு தானம் கொடுத்து வந்தால், குடும்பம் மென்மேலும் செழித்து நல்ல நிலைக்கு வருவார்கள் என்பது நம்பிக்கை. தந்தை இல்லாதவர்கள் தந்தைக்காகவும், தாய் இல்லாதவர்கள் தாய்க்காகவும் அல்லது இருவருக்காகவும் மூத்த மகன் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு பிறந்த அத்தனை மகன்களும் ஒரு கட்டு அகத்திக் கீரையை பசுவிற்கு தானம் கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் அகத்திக் கீரையை தானம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் மற்ற பொருட்களை பசுவிற்கு தானமாக கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே:
மார்கழி சனிக்கிழமை ஹனுமன் வழிபாடு
கணவனை இழந்த பெண்கள் கணவனுக்காக பசுவிற்கு அகத்திக் கீரையை பித்ரு பூஜையின் பொழுது தானம் கொடுக்கலாம். மற்ற நாட்களில் வேறு வகையான தானங்களை செய்யலாம், அகத்திக் கீரையை தானம் செய்யக்கூடாது. பித்ரு பூஜை செய்யும் பொழுது பல வகையான காய்கறிகளைக் கொண்ட தானத்தை அந்தணர்களுக்கு கொடுப்பது உண்டு. அதில் புடலங்காயும் அடக்கம். அமாவாசையின் பொழுது புடலங்காய் உணவு சமைப்பது பித்ருக்களுக்கு பசியை போக்கும். அமாவாசையின் பொழுது துவரம் பருப்பால் ஆகிய உணவு வகைகளை சமைப்பதை தவிர்த்து கிழங்கு வகைகளையும் மொச்சை, பயிறு, கீரை வகைகளை சமைப்பது ரொம்பவும் விசேஷமானது.