- Advertisement -

குருவருளை திருவருள் என்று கூறுவோம். காரணம் குருவின் அருள் இருந்தால்தான் ஒருவருடைய வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. திருமணம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜாதகத்தை பார்க்கும் பொழுது குருவின் அருள் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள். அதே போல் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது என்றாலும் அதற்கு குரு பகவான் ஒரு காரணமாக திகழ்வார். மேலும் பணம் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் குரு பகவான் காரணமாகவே திகழ்கிறார். அப்படிப்பட்ட குரு பகவானை நாம் எந்த முறையில் வழிபட்டால் குரு தோஷம் நீங்கும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வை சரியான இடத்தில் பதியவில்லை என்றாலோ குரு நீச்சமடைந்து இருந்தாலும் குரு தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தம். இப்படி குரு தோஷம் ஏற்பட்டு விட்டால் வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பணம் போன்ற அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். இந்த தடைகளை தகர்த்தெறிய குரு வழிபாடு செய்யும் முறையை பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை குருபகவானுக்குரிய வியாழக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை வரக்கூடிய குரு ஹோரையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு முதலில் நெய்வேத்தியமாக கொண்டைக்கடலையை வேகவைத்து சுண்டலாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த வழிபாட்டிற்கு யானையின் படம் ஒன்று வேண்டும். அர்ச்சனைக்காக முல்லை பூ வேண்டும். யானையின் படத்தை பூஜை அறையில் வைத்து விட்டு உதிரி முல்லை பூக்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அர்ச்சனை செய்வதற்கு முன்பாக மஞ்சளை கையில் கொட்டி சிறிது பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்து கையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது குரு பகவானின் காயத்ரி மந்திரமான “ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்தவாறு முல்லை மலர்களால் யானை படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்து நெய்வேத்தியமாக வைத்த சுண்டலை வீட்டில் இருக்கும் அனைவரும் உண்ண வேண்டும்.

- Advertisement -

பிறகு நம்மால் இயன்ற அளவு பிறருக்கு இந்த சுண்டலை தானமாக தர வேண்டும். இப்படி நாம் குரு பகவானை வழிபடுவதன் மூலம் குரு பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் குரு பகவானின் அதி தேவதையாக திகழக்கூடியவர் சப்த கன்னிகளில் ஒருவராக இருக்கும் பிராமி அம்மனை நாம் வழிபடுவதன் மூலமும் குரு பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதோடு மட்டுமல்லாமல் தங்கத்தால் ஆன மோதிரம் மற்றும் செயினை அணிவதன் மூலமும் குரு பகவானின் அருள் கிடைக்கும். மேலும் அரச மரத்தை குருவாக நினைத்து வழிபடுவதன் மூலம் குரு பகவானின் அருள் கிடைக்கும்.

இப்படி நமக்கு குரு பகவானின் அருள் கிடைத்துவிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணம் கைகூடும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அரசாங்க உதவி கிடைப்பது விரைவில் நடைபெறும். வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் ஏற்பட்டிருந்த நஷ்டங்கள் நீங்கி லாபங்கள் அதிகரிக்கும். வறுமை அகலும்.

இதையும் படிக்கலாமே: தடைகளை நீக்கும் குண்டு மஞ்சள்

மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களுடைய வாழ்க்கையில் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -