
இன்றைய காலத்தில் பலரும் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதை மறந்து விடுகிறார்கள். ஒவ்வொரு தானியத்திற்கும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் இருக்கின்றன. இந்த தானியங்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு அந்த சத்துக்கள் வந்து சேரும். அந்த வகையில் எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக அளவில் தேவைப்படக்கூடிய கால்சியம் சத்து நிறைந்த தானியங்களுள் ஒன்றாக திகழ்வதுதான் ராகி என்று கூறக்கூடிய கேழ்வரகு. கேழ்வரகில் பலரும் அடை, கூழ், கழி, சப்பாத்தி போன்ற முறைகளில் செய்து சாப்பிட முயற்சி செய்வார்கள். இருப்பினும் பலருக்கும் கேழ்வரகின் சுவை பிடிக்காமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களும் கேழ்வரகை விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு குழி பணியாரத்தை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
ரவை – 1/2 கப்
கேழ்வரகு மாவு – ஒரு கப்
புளிக்காத தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – ஒன்று
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரவை, கேழ்வரகு மாவு, தயிர், தண்ணீர் இவை நான்கையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து மிக்ஸியில் இந்த மாவை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேறு தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது.
அரைத்த இந்த மாவை அப்படியே ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, சீரகத்தை போட்டு கடுகு வெடித்ததும் உளுந்து, கடலை பருப்பையும் சேர்த்து உளுந்து மற்றும் கடலைப்பருப்பின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
இவற்றின் நிறம் மாறிய பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போன்றவற்றையும் போட்டு இதனுடன் பெருங்காயத் தூளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதை அப்படியே எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து விட வேண்டும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையையும் மாவில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். குழிப்பணியார மாவு தயாராகிவிட்டது.
இப்பொழுது அடுப்பில் குழிப்பணியார கல்லை வைத்து கல் சூடானதும் அனைத்து குழிகளிலும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள். அவை காய்ந்ததும் கரண்டியை பயன்படுத்தி மாவை எடுத்து குழியில் ஊற்ற வேண்டும். ஒரு புறம் வெந்ததும் அதை திருப்பிப்போட்டு மறுபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கேழ்வரகு குழிப்பணியாரம் தயாராகி இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: கொங்கு நாட்டு ஸ்பெஷல் புளி வடை செய்முறை
எந்த வகையில் தானிய வகைகளை செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதை யோசித்து அதற்கேற்றார் போல் செய்து கொடுப்பதன் மூலம் அனைவரும் சிறுதானியங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை இப்படி கேழ்வரகை வைத்து குழிப்பணியாரம் செய்து பாருங்கள். வேண்டாம் என்று யாரும் கூற மாட்டார்கள்.