- Advertisement -

நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி! தீராத சங்கடங்களும், சீக்கிரமே தீர விநாயகருக்கு உங்கள் கையால் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கிக் கொடுங்கள் போதும்.

மாதம்தோறும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்யாதவர்கள் கூட, நாளை வரக்கூடிய மஹா சங்கட சதுர்த்தி தினத்தில் விநாயகரை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். நாளைய தினம் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால், வருடம் முழுவதும் வரக்கூடிய 11 சங்கட சதுர்த்திக்கு, விநாயகரை வழிபாடு செய்த பலனை நம்மால் பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய இந்த ஆவணி மாத சங்கட ஹர சதுர்த்தியை நாளை, யாரும் தவறவிடாதீர்கள். நாளையதினம், சுலபமான முறையில் விநாயகரை நினைத்து எப்படி விரதம் இருந்து, வழிபாடு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எப்போதும்போல இன்று மாலை உங்களுடைய வீட்டை, உங்களுடைய பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 6 மணிக்கு முன்பாகவே குளித்துவிட்டு, பூஜை அறையில் விநாயகரை நினைத்து ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து உங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும். அவரவர் உடல் சவுகரியத்தைப் பொறுத்து விரதம் இருந்து கொள்ளுங்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டுபவர்கள், பலகாரங்கள் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளைய தினம் வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு காலையிலேயே விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு உங்களது கையால் அருகம்புல் மாலையை வாங்கி கொடுக்க வேண்டும். முடிந்தால் பசுமையாக விளைந்திருக்கும் அருகம்புல்லை உங்கள் கையாலேயே பறித்து, அதை மாலையாகத் தொடுத்து விநாயகருக்கு கொடுப்பது மிக மிக நல்லது. மாலையாக தொடக்க முடியாதவர்கள் ஒரு கட்டு அருகம்புல்லையாவது விநாயகருக்கு நாளைய தினம் வாங்கிக்கொடுக்க மறவாதீர்கள். அருகம் புல்லை வாங்கி கொடுத்துவிட்டு, விநாயகருக்கு 11 தோப்புக்கரணம் போட்டு, விநாயகரை 11 முறை வலம் வரவேண்டும். இப்படியாக உங்களது விரதத்தை நாளைய தினம் விநாயகர் கோவிலுக்கு சென்று தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நாளைய தினம் முழுவதும் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விநாயகரை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளை மாலை 6 மணி அளவில் உங்களுடைய வீட்டில் சங்கடஹர சதுர்த்தி பூஜையை தொடங்க வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, முடிந்தால் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை 11 என்ற கணக்கில் செய்து நிவேதனமாக வைத்து, விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல்லினை சூட்டி, விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். கொழுக்கட்டை செய்ய முடியாதவர்கள் ஒரு டம்ளர் பசும்பாலில் இனிப்பு சேர்த்தும் நிவேதனம் செய்யலாம்.

- Advertisement -

இப்போது பூஜைக்கு உங்கள் வீட்டு பூஜை அறை தயாராக உள்ளது. நீங்கள் பூஜை அறையிலேயே அமர்ந்து ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இறுதியாக உங்களுடைய பிரார்த்தனையை இறைவனிடம் சொல்லி, சங்கடங்கள் தீர வேண்டும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இறைவனுக்கு தீப தூப கற்பூர ஆரத்தி காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

நாளைய தினம் விநாயகரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய தீராத சங்கடங்கள் எதுவாக இருந்தாலும், அது சீக்கிரமே தீர வேண்டும் என்று அந்த விநாயகரை மனதார பிரார்த்தனை செய்து கொண்ட இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -