- Advertisement -

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் சிறப்புகள்

புவியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்க்கையில் செய்வதற்கு ஒவ்வொரு வகையான கடமைகள் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கடமைகளில் சிறுதும் வழுவாமல் செயல்படுவதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும். ஆனாலும் சில நேரங்களில் எத்தகைய பலம் வாய்ந்த ஒரு மனிதனும், தனக்கு விதிக்கப்பட்ட கடமையை பல காரணங்களை சுட்டிக்காட்டி தவிர்க்க பார்க்கிறான். அப்படி கடமையிலிருந்து வழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் “திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலை” பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் தல வரலாறு

புராண காலத்தில் இத்தலம் “பிருந்தாரண்ய க்ஷேத்ரம்” என அழைக்கப்பட்டது. மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் “பார்த்தனாகிய” “அர்ஜுனனுக்கு” அவனின் ரதத்தை செலுத்தும் “சாரதியாக” பகவான் “கண்ணன்” ஏவல் புரிந்தார். அந்த கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்கு “பார்த்தசாரதி” பெருமாள் என பெயர் ஏற்பட்டது. கேணி என்றால் குளம் என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் “அல்லி” மலர்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊர் ” திரு அல்லிக் கேணி” என்று அழிக்கப்பட்டது. காலப்போக்கில் அது திருவல்லிக்கேணி என்றானது.

- Advertisement -

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இது இருந்தாலும், இக்கோவிலை 7 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக நன்கு வடிவமைத்து கட்டியவர்கள் “பல்லவ” மன்னர்கள் ஆவர். பின்னாளில் “சோழர்களும், வீஜயநகர பேரரசர்களும்” இக்கோவிலை மேம்படுத்தி கட்டியிருக்கின்றனர். ஆழ்வார்களில் “திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், மற்றும் திருமங்கை ஆழ்வாரால்” மங்களாசாசனம் செய்யபட்ட திருத்தலம் ஆகும் இது. வைணவ கோவில்களில் “108 திவ்ய தேசங்களில்” முக்கியமான கோவில்களில் ஒன்றானதாகும். புகழ் பெற்ற மனிதர்களான “சுவாமி விவேகானந்தர்”, “மகாகவி பாரதியார்”, “கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம்” போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர்.

தல சிறப்பு

- Advertisement -

இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதி பெருமாளின் சிலை “9” ஆடி உயரம் கொண்டது. அனேகமாக பாரதத்தில் இந்த கோவிலின் பெருமாள் மட்டுமே முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார். இங்கு பார்த்தசாரதி பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதி பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு.

இக்கோயிலிலுள்ள நரசிம்மர் சந்நிதியில் வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை நமது முகத்தில் தெளித்து, அத்தீர்த்ததை அருந்த நம்மை பீடித்திருக்கும் “துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள்” போன்ற பாதிப்புகள் நீங்கும். இக்கோவிலின் பெருமாளை வணங்குவதால் ஒருவரின் ஆளுமை திறனும் மேம்படும். மேலும் கல்வியில் சிறக்க, நல்ல இல்வாழ்க்கை துணை அமைய இக்கோவிலில் வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கலை நிவேதனமாக அளித்து வழிபடுகின்றனர்.

- Advertisement -

கோவில் அமைவிடம்

திருவல்லிக்கேணி அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணி என்ற பகுதியில் அமைந்துள்ளது. திருவல்லிக்கேணி பகுதிக்கு செல்ல சென்னை நகருக்குள் குறைந்த கால இடைவெளியில் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரயில் மூலமாகவும் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இறங்கி, நடந்து இக்கோவிலை அடையலாம்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5.30 முதல் மதியம் 12.30 வரையும்
மாலை 4.30 மணியிலிருந்து இருந்து 9.00 மணி

கோவில் முகவரி

செயல் அலுவலர்
ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்
திருவல்லிக்கேணி, சென்னை – 600006

தொலை பேசி எண்

44-28442462
44- 2844 2449

இதையும் படிக்கலாமே:
மாசாணி அம்மன் கோவில் பற்றிய முழு தகவல்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மந்திரங்கள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Triplicane Parthasarathy temple timing, Parthasarathy temple history in Tamil, Parthasarathy temple pooja timing, Parthasarathy temple address in Tamil, Parthasarathy temple contact number and much more details about Parthasarathy Perumal temple Triplicane Chennai.

- Advertisement -