- Advertisement -
சமையல் குறிப்புகள்

பூண்டு கருவேப்பிலை பொடி செய்முறை

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை நம்முடைய உணவில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய அனைவரும் சந்திக்கக்கூடிய பெரும்பாலான நோய்களுக்கு உணவு பழக்க வழக்கங்களே காரணமாக திகழ்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் கடைகளில் விற்கக்கூடிய தேவையற்ற பொருட்களை உண்ணுவதால் தான் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு பொருளாக கருதப்படும் கருவேப்பிலையை வைத்து கருவேப்பிலை பொடி எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கருவேப்பிலையில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்களும், இரும்புச்சத்து குறைபாட்டால் கஷ்டப்படுபவர்களும், கண் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் என்று பல பேருக்கும் கருவேப்பிலை என்பது அருமருந்தாக திகழக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் இந்த பொடியில் நாம் பூண்டை சேர்ப்பதால் பூண்டு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
  • கடலைப்பருப்பு – 1/2 கப்
  • கருப்பு உளுந்து – 1/2 கப்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • வேர்க்கடலை – 1/2 கப்
  • கருப்பு எள் – 1/4 கப்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 10
  • கட்டி பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்
  • பூண்டு – 2 ,
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் கருவேப்பிலையை நன்றாக உருவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதில் நல்லெண்ணையை சேர்த்தும் வருக்கலாம். கடலைப்பருப்பு நன்றாக வறுத்த பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி விடுங்கள். அடுத்ததாக கருப்பு உளுந்தை சேர்க்க வேண்டும். அதையும் நன்றாக பொன்னிறமாக வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

புளியை கடாயில் சேர்த்து அதையும் நன்றாக வறுத்து அதையும் தட்டில் சேர்த்து விடுங்கள். அடுத்ததாக வேர்க்கடலையை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு எள், சீரகம், மிளகு இவற்றையும் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து அதையும் எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் உடன் பொடியாக நுணுக்கிய கட்டி பெருங்காயத் துளையும் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு சிறிது நல்லெண்ணெய் ஊற்றிய அதில் 2 முழு பூண்டுகளை பொடி பொடியாக நறுக்கி அதில் சேர்த்து குறைந்த தீயில் வைத்து சிவக்க வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கருவேப்பிலையை அந்த கடாயில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் துளை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கருவேப்பிலையை கையில் தொட்டவுடன் நொறுங்கும் அளவு பதம் வரும் வரை குறைந்த தீயில் வைத்து வறுத்து அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இவை அனைத்தும் நன்றாக ஆரட்டும். மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் பருப்பு பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பல்ஸ் மோடில் வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதே மிக்ஸி ஜாரில் கருவேப்பிலையை சேர்த்து பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். பிறகு அதில் வறுத்து வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பருப்பு பொடி அதில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒருமுறை மட்டும் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கருவேப்பிலை பொடி தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த பொடியை நாம் அப்படியே இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக் கொள்ளலாம். இந்த பொடியுடன் தேங்காய் துருவலை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்தால் கருவேப்பிலை துவையல் தயாராகிவிடும். மேலும் புளி சாதம் கிளரும் பொழுது இந்த பொடியையும் சேர்த்து கலந்தால் அந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே மஸ்ரூம் பெப்பர் மசாலா செய்முறை

இந்த ஒரு பொடியை வைத்து நாம் நம்முடைய அவசரத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மிகவும் சத்து நிறைந்த இந்த பொடியை தயார் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் நேரமும் மிச்சமாகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

- Advertisement -