- Advertisement -

எந்த கிரகத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு செவ்வாய் பகவானுக்கு இருக்கிறது. ஆம் செவ்வாய் பகவானை மட்டும் தான் மங்கள காரகன் என்று கூறுவார்கள். ஆனால் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களை கருத்தில் கொண்டு செவ்வாய் பகவான் என்றாலே பிரச்சனைக்குரியவர் என்று நினைத்து விடுகிறோம். செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

மங்கல காரகனாக திகழக்கூடிய செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்க வேண்டும் என்றாலும் சாதகமற்ற சூழ்நிலையில் செவ்வாய் பகவான் இருந்தாலும் நமக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். அவற்றில் குறிப்பிடத்தக்கது கடன் பிரச்சினை, சொந்தமாக வீடு மனை அமையாதது, திருமண யோகம் கிடைக்காதது என்று நாம் கூறலாம். இதை சரி செய்து விட்டாலே நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இல்லாமல் போகும். அதை சரி செய்வதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். பத்தாவது நாள் கிருத்திகை நட்சத்திரம் வருவது போல் பார்த்துக் கொள்வது சிறப்பு. தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை எடுத்து ஒரு சிவப்பு துணியில் வைத்து தலையணைக்கு அடியில் வைத்து படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் இந்த துவரம் பருப்பை எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்து முடித்து விடுங்கள். பத்தாவது நாள் காலையில் அதாவது கிருத்திகை நாளன்று சேகரித்து வைத்திருக்கும் துவரம் பருப்பு அனைத்தையும் வேக வைக்க வேண்டும். வேகவைத்த துவரம் பருப்பை செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் தலையை வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி காகத்திற்கு தானமாக வழங்கி விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இயன்றவர்கள் அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். பிறகு முருகப்பெருமானுக்கு ஒன்பது நெய் தீபங்கள் ஏற்றி வைத்து செவ்வாய் தோஷம் முழுமையாக நீங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல் தினமும் செவ்வாய் பகவானுக்குரிய பாடலை நாம் வீட்டிலேயே சிவப்பு திரி போட்டு விளக்கேற்றி வைத்து கூறுவதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளை நம்மால் பெற முடியும். இந்த பாடலை தினமும் 9 முறை கூற வேண்டும்.

- Advertisement -

பாடல்
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு..

இதையும் படிக்கலாமே: சித்திரை அமாவாசையில் செய்ய வேண்டியது.

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கிக் கொள்வோம்.

- Advertisement -