
கோதுமை மாவில் எப்பொழுதும் ஒரே விதமான சப்பாத்தி, பூரியை தான் பலரும் செய்வதுண்டு. இதற்குத் தொட்டுக்கொள்ள அதிகமாக உருளைக்கிழங்கு மட்டுமே விருப்பமாக பலரும் சாப்பிட்டு வருவதுண்டு. ஆனால் இந்த சப்பாத்தியை சற்று வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் இதனுடன் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். அந்த அளவிற்கு சுவையும் அற்புதமாக இருக்கும். பார்ப்பதற்கு இதன் நிறமும் பச்சை வண்ணத்தில் இருப்பதால் குழந்தைகள் இந்த நிறத்தை பார்த்ததும் இந்த சப்பாத்தியை விருப்பமாக சாப்பிடுவார்கள். எப்பொழுதும் 1, 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் கூட இதன் சுவையில் சற்று கூடுதலாகவே சாப்பிடுவார்கள். நீங்கள் போதும் என்று சொன்னாலும் வேண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப், வெள்ளரிக்காய் – கால் கிலோ, பச்சை மிளகாய் – 4, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – கால் கப், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், சீரக தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 10 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதேபோல் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் இஞ்சியைத் தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இவற்றுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கால் கப் கொத்தமல்லி தழை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் அரை ஸ்பூன் சீரக தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இந்த கலவையுடன் 2 கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதில் இருக்கும் ஈரப்பதம் சப்பாத்தி மாவு பதத்திற்கு வருவதற்கு ஏற்றதாக இருக்கும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்தவுடன், இதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, சப்பாத்தி கட்டை மீது வைத்து, சப்பாத்தி போல் தேய்த்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது தோசைக்கல் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்த மாவை ஒவ்வொன்றாக சேர்த்து சப்பாத்தி போல் சுட்டு எடுக்க வேண்டும். பிறகு இந்த சப்பாத்தியை சுட சுட அப்படியே சாப்பிடலாம்.