- Advertisement -
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையில் தக்காளி பிரியாணி மணக்க மணக்க கோயம்புத்தூர் ஸ்டைலில் இப்படி ஒரு முறை செய்து பாருங்க, எல்லோரும் கறி சோறு மாதிரி இருக்கு என்பார்கள். பிரியாணி வாசம் தோத்து போகும் அளவிற்கு, ரொம்பவே ஈஸியாக செய்யக்கூடிய இந்த தக்காளி பிரியாணி எப்படி கொங்கு நாட்டு ஸ்டைலில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :

  • பிரியாணி குருணை – 2 ஆழாக்கு
  • பெங்களூர் தக்காளி – ஐந்து
  • பெரிய வெங்காயம் – இரண்டு
  • கடலை எண்ணெய் – தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  • புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
  • மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
  • மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • பிரியாணி மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா இரண்டு
  • சோம்பு – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி பிரியாணி செய்முறை விளக்கம் :

    தக்காளி பிரியாணி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புதினா மற்றும் மல்லி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தனியாக வையுங்கள். மற்ற காய்கறிகளை சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வையுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான பாத்திரத்தை தம் வைக்கக்கூடிய வகையில் வையுங்கள். தேவையான அளவு எண்ணெய் விட்டு பின் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போன்றவற்றை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

    - Advertisement -

    பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை காத்திருங்கள். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். பின்னர் புதினா மற்றும் மல்லி இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். இவை சுருண்டு வந்ததும் தக்காளியை அரைத்து விழுதாக சேர்க்க வேண்டும்.

    அரிசி, குருணை என்பதால் தக்காளியை அரைத்து சேர்க்கும் பொழுது தான் அரிசியுடன் சேர்ந்து தக்காளியும் நல்ல ஒரு சுவையை தரும். தக்காளி விழுதை சேர்த்த பின்பு நீர் வற்ற நன்கு சுண்ட வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூள் மற்றும் பிரியாணி மசாலாத்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து பச்சை வாசம் நீங்க நன்கு வதக்கி விடுங்கள். எண்ணெய் பிரிந்து வந்து மசாலா வாசம் போனதும், ஒரு ஆழாக்கு அரிசிக்கு 21/2 ஆழாக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இரண்டு ஆழாக்கு நாம் சேர்த்துள்ளதால் 5 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொதிக்க விடுங்கள்.

    - Advertisement -

    இதையும் படிக்கலாமே:
    மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறை

    தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த பிரியாணி குருணை அரிசியை சேர்த்து வேக விடுங்கள். (குருணை அரிசியை அதிக தண்ணீர் சேர்த்து ஊற வைக்கக் கூடாது, அலசிய தண்ணீரை வடித்து வைத்தாலே போதும்). அரிசி பாதி அளவிற்கு வெந்ததும், மேலே வாழை இலையால் மூடி, பின்னர் பாத்திரத்தை மூடி வைக்கவும். 10 லிருந்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து தம் போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான், வீடே மணக்கும் பிரியாணி வாசம் மிகுந்த தக்காளி பிரியாணி ரெடி! கொங்கு நாட்டு ஸ்டைலில் ரொம்பவே சுலபமாக அடிக்கடி செய்யக்கூடிய இந்த தக்காளி பிரியாணி நாமும் செய்து பார்த்து அசத்தலமே!

    - Advertisement -