
இட்லி தோசைக்கு மாவு அரைத்து விட்டு அதை ஒரு வாரம் பத்து நாட்கள் ஆனாலும் தினமும் தோசை இட்லியாக ஊற்றி சாப்பிடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. திடீரென்று தோசை மாவு காலியாகி விட்டது என்னும் பட்சத்தில் தோசை ஊற்றுவதற்கு கோதுமை மாவை கரைத்து தோசை ஊற்றுவோம்.
தோசை பிரியராக இருந்தாலும் கோதுமை மாவு தோசை சாப்பிடுவதற்கு பலருக்கும் விருப்பம் இருக்காது. அப்படி விருப்பமே இல்லாமல் சாப்பிடுபவர்களையும் சரி சாப்பிடவே மாட்டேன் என்று சொல்பவர்களையும் சரி அதிகமான தோசையை சாப்பிட வைப்பதற்கு கோதுமை தோசையை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவையும், அரிசி மாவையும் சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கட்டி விழாத அளவிற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மாவை தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். 20 நிமிடம் ஊறட்டும்.
அதற்குள் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றை சேர்த்து இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயமும் தக்காளியும் நன்றாக வதங்கிய பிறகு கொத்துமல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும். இந்த கலவை நன்றாக ஆரட்டும். ஆரியபிறகு இதை அப்படியே நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் குறைந்த தீயில் வைத்து விட்டு எப்பொழுதும் கோதுமை தோசை ஊற்றுவது போல் ஊற்ற வேண்டும்.
தோசைக்கு தேவையான அளவு எண்ணெயும் ஊற்றி ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு தோசை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் அருமையான கோதுமை தோசை தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: வெங்காயத் தொக்கு ஊறுகாய் செய்முறை
மொறு மொறுவென்று மிகவும் அருமையான சுவையில் தயார் ஆன இந்த கோதுமை தோசைக்கு கார சட்னி, பூண்டு சட்னி மிகவும் அருமையாக இருக்கும். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.