
இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் சீக்கிரத்திலேயே உடம்பில் அனைத்து விதமான பிரச்சனைகளும் வந்துவிடுகிறது. அதிலும் முக்கியமாக கால்சியம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இவை இரண்டும் தான் பலருக்கும் பெரிய குறைபாடாக இருக்கிறது. இவற்றை மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்வதை விட நாம் உண்ணும் உணவின் மூலம் சரி செய்வது தான் மிகவும் நல்லது. ஏனென்றால் மாத்திரைகள் மூலம் நமது உடம்பில் தேவையில்லாத பிரச்சினைகள் தான் அதிகரிக்கிறது. எனவே காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிகம் உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய்களிலிருந்து எளிதாக விடுபட முடியும். அப்படி உடம்பில் இரும்புச்சத்து அதிகரிக்க கூடிய இந்த கீரை குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனை சாதத்துடன், நெய் சேர்த்து சாப்பிடும்பொழுது அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை – ஒரு கட்டு, பச்சை மிளகாய் – 7, வெங்காயம் – 2, தக்காளி – 6, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, பூண்டு – 15 பல், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வர மிளகாய் – 3.
செய்முறை:
முதலில் ஒரு கட்டு அரைக்கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தடிமனான காம்பு பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, இலை மற்றும் இளம் காம்புப் பகுதிகளை பொடியாக கிள்ளி எடுக்க வேண்டும். பிறகு இவற்றை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமாக அலசி கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பூண்டை தோலுரித்து வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் 4 அல்லது 5 தம்ளர் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும். பிறகு குக்கரை அடுப்பின் மீது வைத்து, மூடி குக்கர் விசில் போட வேண்டும்.
குக்கரில் 5 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு, குக்கரில் பிரஷர் குறைந்ததும் கீரையை மண் சட்டியில் சேர்த்து, மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான அரைக்கீரை கடையல் தயாராகிவிட்டது. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அட்டகாசமாக இருக்கும்.