
“ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்கிற அற்புதமான அனுபவ தத்துவத்தை உலகிற்கு அளித்தவர் “புத்தர் பிரான்”. புத்தரின் போதனைகளை உள்ளடக்கிய, அவரின் தத்துவக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு “புத்த மதம்” தோன்றியது. இன்றைய உலகில் நான்காவது பெரிய மதமாக புத்த மதம் திகழ்கிறது. ஏறத்தாழ கிழக்காசிய நாடுகள் அனைத்துமே புத்தமதத்தை பின்பற்றுகின்ற நாடுகளாக உள்ளன. இத்தனை சிறப்புகள் வாய்ந்த புத்த மதத்தின் ஆதார நாயகனான புத்தர் குறித்தும், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரின் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை போன்ற பல்வேறு தகவல்களை சுருக்கமாக இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
| புத்தர் பிறந்த ஆண்டு | கி.மு. 563 ஆம் ஆண்டு |
| புத்தர் பிறந்த இடம் | லும்பினி, நேபாளம் |
| புத்தர் இயற்பெயர் என்ன? | சித்தார்த்தர் அல்லது சித்தார்த்த கௌதமர் |
| புத்தரின் தந்தை பெயர் | சுத்தோதனர் |
| புத்தரின் தாயார் பெயர் என்ன? | மாயா தேவி |
| புத்தர் உடன்பிறந்தோர் பெயர் | சுந்தரி நந்தா, நந்தா |
| புத்தரின் மனைவி பெயர் என்ன? | யசோதரா |
| புத்தரின் மகன் பெயர் | ராகுலன் |
| புத்தர் இறந்த ஆண்டு | கி.மு. 483 ஆம் ஆண்டு |
| புத்தர் இறந்த இடம் | குஷிநகர், இந்தியா |
| புத்தரின் பெயர்கள் சில | அகளங்கன் கௌதமன் போதிமாதவன் அகளங்கமூர்த்தி |
Putharin iyar peyar: புத்தரின் இயற்பெயர் “சித்தார்த்தர்” என்பதாகும். ஞானோதயம் அடைந்த பிறகு அவருக்கு “புத்தர்” என்கிற பெயர் உண்டானது. கௌதம புத்தர் எனவும் சிலர் இவரை அழைப்பார்கள். அக்கால சமூகத்தில் அரசாலும் சத்திரிய குலத்தில், “சாக்கிய” வம்சத்தில் புத்தர் அவதரித்தார். இதனாலேயே இவரை “சாக்கியமுனி” என்றும் சிலர் அழைப்பார்கள்.
உலகின் துயரங்கள் என்னவென்றே அறியாதவாறு மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட இளவரசரான சித்தார்த்தர், ஒரு முறை தனது ஆட்சிக்குட்பட்ட நகர வீதியில் உலா சென்ற பொழுது அனாதையாக சுற்றித்திரிந்த முதியவர், உடல் முழுவதும் புண்கள் கொண்ட நோயாளி, உறவினர்கள் புடைசூழ எடுத்துச் செல்லப்பட்ட இறந்த நபரின் உடல் ஆகிய காட்சிகளை முதன்முறையாக கண்டார்.
இந்த காட்சியை கண்ட புத்தர் அரண்மனைக்கு திரும்பியதும் அவரால் முன்பு போல இருக்க முடியவில்லை. அவர் கண்ட காட்சிகளுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிய முடிவெடுத்து அரண்மனையை விட்டு சென்றார். இறுதியாக அனைத்தையும் துறந்த துறவியாக இருக்கின்ற மனிதர் ஒருவரே எந்தவித துன்ப, துயரங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை அறிந்தார். பிறகு கடுமையான ஞானதவங்களில் ஈடுபட்ட சித்தார்த்தர், ஞானோதயம் அடைந்து “புத்தர்” என்கிற பெயரை பெற்றார்.
மிகப் பெரும் செல்வந்தர்களின் தங்களின் இல்லங்களுக்கு வருகை தர விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த புத்தர், “அமரபாலி” என்கிற ஊர் பொது மகளின் அழைப்பை ஏற்று, அவளின் இல்லத்தில் தங்கி, அவளுக்கு புத்த மத தீட்சை அளித்து, சமூகத்தில் அவளின் நிலையை உயர்த்தினார்.