- Advertisement -
சமையல் குறிப்புகள்

முருங்கைக்காய் மசாலா குழம்பு ஒருவாட்டி இப்படி வைத்து பாருங்களேன்! ஒவ்வொரு முறை முருங்கக்காய் வாங்கும் போதும் இதே குழம்பை தான் செய்வீங்க.

- Advertisement -

பெரும்பாலும் முருங்கைக்காயை வைத்து நம்முடைய வீட்டில் சாம்பார் வைப்போம். அப்படி இல்லை என்றால் பொரியல் செய்வோம். இது இரண்டையும் தவிர்த்து, முருங்கைக்காயை வைத்து ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி. மிஸ் பண்ணாமல் தெரிஞ்சு வெச்சுக்கோங்க.

முதலில் இந்த முருங்கைக்காய் மசாலா குழம்பு வைப்பதற்கு ஒரு அரவையை நாம் அரைக்க வேண்டும். அதற்கு சில மசாலா பொருட்களை வதக்க வேண்டும். அது எப்படி என்பதை முதலில் பார்த்துவிடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், பட்டை சிறிய துண்டு – 1, கிராம்பு – 2, சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், கசகசா – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை முதலில் பாதி அளவு வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பொருட்கள் அனைத்தும் பாதி அளவு வறுபட்டு வாசம் வந்தவுடன், இதோடு இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டுப்பல் – 6 தோலுரித்து, சின்ன வெங்காயம் – 15 பல், பெரிய தக்காளி – 2 கொஞ்சம் பொடியாக வெட்டியது, இந்த பொருட்களை சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயமும் தக்காளியும் நன்றாக வழங்க வேண்டும். மொத்தமாக 5 நிமிடங்கள் இந்த பொருட்களை வதக்கினால் போதும்.

அடுத்தபடியாக அதே கடாயில் வெங்காயம் தக்காளியுடன் மல்லித் தூள் – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், துருவிய தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். (கருத்திற்கு ஏற்ப உங்களுக்கு தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் மிளகாய் தூளை சேர்த்து போட்டுக் கொள்ளலாம்.)

- Advertisement -

வதக்கிய இந்த மசாலா பொருட்கள் அனைத்துமே நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரின் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். இப்போது குழம்பு செய்வதற்கு மசாலா பொருட்கள் தயார். (இந்த மசாலா பொருட்களை பட்டையிலிருந்து தேங்காய்துருவல் வரை, ஒன்றாக ஒரே கடையில் தான் வதக்கப் போகின்றோம். ஆனால் வதக்கும் போது, எந்த பொருளுக்கு பின் எந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்பதை மட்டும் கவனமாக பார்த்துக் கொண்டு வதக்கிக் கொள்ளுங்கள்.)

குழம்பை எப்படி தாளிப்பது என்று பார்த்துவிடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொண்டு, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 6 பல், சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை கடாயில் ஊற்றி, இந்த குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு முறை நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

குழம்பு நன்றாகக் கொதித்ததும், 2 முருங்கைக் காய்களை துண்டுதுண்டாக வெட்டி குழம்பில் சேர்த்து, மீண்டும் மூடி போட்டு 7 லிருந்து 8 நிமிடங்கள் கொதிக்க வைத்து, முருங்கக்காய் வெந்தவுடன் இறக்கினால் சூப்பரான முருங்கைக்காய் மசாலா குழம்பு தயார். இந்தக் குழம்பு ரொம்பவும் தண்ணியாக இருக்க கூடாது. பார்ப்பதற்கு கிரேவி பதத்தில் இருக்க வேண்டும். இறுதியாக ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளைத் தூவி சுட சுட சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவை இருக்கும். இரண்டு முருங்கை காய்களைப் போட்டு மேலே சொன்ன அளவுகோலாக குழம்பு வைத்தால் மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -