ஒருவரின் வாழ்க்கை எப்பொழுதும் பிரச்சினைகள் நிறைந்ததாகவும், மனக்கவலை நிறைந்ததாகவும் இருந்தால் அங்கு கிரக சூழ்நிலை சரியில்லை என்று சொல்லலாம். அதே போல் எவ்வளவு முயற்சி செய்தும் வேலை கிடைக்காமல் இருப்பது, தொழிலில் நஷ்டம் ஏற்படுவது அல்லது அடிக்கடி உடல் ஆரோக்கியமில்லாமல் போவது இதுபோன்ற கசப்பான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு நவகிரக தோஷம் இருக்கிறதென்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறான நவகிரக தோஷம் நீங்கி குடும்பத்தில் நல்ல சூழல் உண்டாக என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சூரிய தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கும். இதுபோன்ற சூழலில் சூரிய பகவானை மகிழ்விக்க தினமும் சூரிய தரிசனத்தின் பொழுது சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். விடியற்காலை சூரியன் உதிக்கும் திசையில் நின்று கொண்டு ஒரு டம்ளர் நிறைய தண்ணீரில் குங்குமத்தை கலந்து அதனையும் கையில் எடுத்துக்கொண்டு, சூரிய பகவானை மனதார வேண்டி 3 சொட்டு தண்ணீரை தரையில் விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சூரிய தோஷத்தில் இருந்து விடுபட்டு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சந்திர தோஷம் உள்ளவர்களுக்கு எப்போதும் ஏதேனும் மனக்கவலை இருந்துகொண்டே இருக்கும். அனைத்து விஷயங்களும் சரியாக நடந்து கொண்டிருந்தாலும் அவர்களின் மனம் ஒருவித சஞ்சலத்துடனே இருக்கும். சந்திரதோஷம் உள்ளவர்கள் சிவனை வழிபட்டு வந்தால் சந்திர தோஷம் நீங்கி நல்ல மாற்றம் உண்டாகும். பிரதோஷ நாட்களில் சிவனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்யும் பொழுதும் அபிஷேகத்திற்கான பொருட்களை வாங்கிக்கொடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதை கண் குளிர காண வேண்டும். இதன் மூலம் சந்திர தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு, நடக்க வேண்டிய மங்களகரமான விஷயங்கள் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். முக்கியமாக திருமண தடை இருக்கும். இவ்வாறு செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பெருமளவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதாலும், குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தமான பொருட்களை தானமாக கொடுப்பதாலும் செவ்வாய் தோஷத்தினால் உண்டாகும் பாதிப்பிலிருந்து எளிதில் விடுபட முடியும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தாலும் விரைவில் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற முடியும்.
புதன் தோஷம் உள்ளவர்களுக்கு எப்போதும் உளவியல் சார்ந்த பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கும். எனவே உடலில் எப்போதும் செம்பினாலான தாயத்து அல்லது காப்பை அணிந்து கொள்வது மிகவும் நன்மையை கொடுக்கும். வினாயகர் கோவிலுக்குச் சென்று விநாயகருக்கு அருகம்புல் படைத்து, நெய் தீபம் ஏற்றி விநாயகரைத் மனதார தொழுது வருவதன் மூலம் புதன் தோஷத்தில் இருந்து எளிதில் விடுபட முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தது என்றால் அவர்களுக்கு படிப்பு சம்பந்தமான பிரச்சினைகளும், வேலை, தொழில் சம்பந்தமான பிரச்சனைகளும் உண்டாகும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு மஞ்சள் நிற துணி அணிவித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றி வந்தால் குரு தோஷம் விலகி நல்ல பலன் உண்டாகும். அதேபோல் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று அவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து, வாழைப் பழங்களை தானமாக கொடுப்பதன் மூலமும் குரு தோஷத்தில் இருந்து எளிதில் விடுபட முடியும்.