நாம் வருடம் முழுக்க எத்தனையோ பண்டிகைகளை கொண்டாடினாலும், நமது வாழ்வியலோடு கலந்த ஒரு இனிய நாளாகவும், தமிழர்களுக்கே உரிய திருநாளாகவும் இருப்பது பொங்கல் திருநாளே. அத்தகைய பொங்கல் திருநாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் திருநாள் கட்டுரை போட்டி (Pongal thirunal katturai in Tamil), பொங்கல் திருநாள் பேச்சு போட்டி (Pongal speech in Tamil) போன்றவை நடைபெறுவது வழக்கம். அது போன்ற பொட்களுக்கு உதவக்கூடிய ஒரு பதிவு தான் இது.
தமிழகத்தின் தனி விழா, பண்பாட்டு பெருவிழா, மனித குலத்தின் மாண்பையும், தமிழகர்கள் மனிதர்களை மட்டும் அல்லாமல் விலங்குகளையும் சமமாக நேசிக்கும் அறத்தோடு வாழ்பவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா, உணர்வினார்களோடு ஒன்று கூடி பின்புறம் இணையில்லா இனிய திருநாள் தான் பொங்கல்.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக வருவது போகி. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வாசகத்திற்கு ஏற்ப, பழமைகளை பக்குவமாய் வழி அனுப்பிவிட்டு, வளர்ச்சிக்கு வளமை கூட்டும் புது வரவுகளை மலர்ச்சியோடு மக்களை தம் மனதார வரவேற்க்கு திருநாள் தான் போகி. வீட்டையும் நாட்டையும் தூய்மை படுத்துகின்ற வகையில் கொண்டாடப்படும் சிறப்பான ஒரு திருநாள் இது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
என்று தமிழ் மறை உழவர்களின் உயர்வையும் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. அப்படி உழுதுண்டு வாழும் பழுதற்ற உழவர்களின் உழைப்பு திருநாளிலே, தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாள்.
பெரும் பொங்கல் என்று அழைக்கப்படும் இந்நாளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து நீராடி, புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்து மகிழ்வது வழக்கம். உழவர்களின் உன்னத நாயகனாக இருப்பவர் சூரிய பகவான். அந்த நாயகனை போற்றும் வகையில் இந்நாளில் கதிரவனுக்கான படையலில் வெற்றிலை, பாக்கு , தேங்காய் மற்றும் முக்கனிகளுடன் இஞ்சியும், மஞ்சளும், கரும்பும் அருகம்புல்லும், பூசணியும் வைத்து, அனைவரும் கூடி புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என முழங்கி, நெஞ்சில் நன்றியும், நேயமும் பொங்க, விடியல் நாயகனை தொழுது வணங்கும் நாள் தான் பெரும் பொங்கல் திருநாள்.
பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டுப்பொங்கல், உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றி உணர்வோடு மதித்து போற்றிடும் திருநாளாக திகழ்கிறது.
பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
நெல்லு வயலில் உழுது வரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா
என்ற பாரதியின் வரிகளில் எவ்வளவு நன்றி உணர்வு இருக்கிறதோ, அதே உணர்வு திருநாள். ஒவ்வொரு உழவனின் உள்ளத்திலும் சிந்தையிலும் உள்ளது என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இருக்கிறது மாட்டுப்பொங்கல் திருநாள்.
இந்நாளில் உழவர்கள் தன் பெரும்செல்வமாக கருதும் மாடுகளை குளிப்பாட்டி, அழகுபடுத்தி, கழுத்தில் சலங்கை கட்டி, கொம்பில் வண்ணங்கள் பூசி, நெற்றியில் மஞ்சள் பூசி, குங்கும பொட்டு வைத்து பொங்கலிட்டு வணங்குவர்.
மாட்டுப்பொங்கலை தொடர்ந்து எருது விடும் திருவிழா நடைபெறும். இவ்விழா மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, எருதுகட்டு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைப்படுவது வழக்கம். இது தமிழரின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவாகும். பண்டைய காலத்தில் இந்நிகழ்வு ஏறு தழுவுதல் என்று பெயர். இவ்விளையாட்டு வீரத்திற்கு அடையாளமாக இருந்தாலும் எருதுகளை அன்போடு தழுவி அதற்கு உடம்பில் சிறு காயம் கூட ஏற்படாத வண்ணம் இன்றளவும் இவ்விழா நடைபெறுவதே இதன் சிறப்பு. அக்காலத்தில் இந்நிகழ்வில் வெற்றி பெரும் ஆடவரை, பெண்கள் விரும்பி மனப்பர் என்பது தனி செய்தி.
பொங்கல் பண்டிகையில் கடைசி நாளாக வருவது காணும் பொங்கல். நம்மை சுற்றி உள்ள மக்களை, பெரியவர்களை, உறவினர்களை, நண்பர்களை அவர் தம் இல்லம் சென்று வணங்கி, அன்பொழுக உரையாடி மகிழ்தலே இத்திருநாளின் நோக்கம். மண்ணின் மனத்தை உணர்த்தவல்ல கும்மி, கோலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளும், இளம் பெண்களின் ஆடல், பாடல் போன்றவையும் இந்நாளுக்கு சிறப்பை சேர்கின்றன. இந்த நாளை நாம் திருவள்ளுவர் திருநாளாகவும் கொண்டாடுகிறோம்.
இப்படியான பொங்கல் விழாவினால் மக்களிடையே பகைமை மறந்து ஒற்றுமை உண்டாகிறது, நட்புறவு வளர்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பொங்கல் விழா புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது.