Republic day speech in Tamil: வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் திகழ்கிறது. குடியரசு என்றால் என்ன? இந்திய குடியரசு தினம் உருவானது எப்படி? இந்த குடியரசு தின விழாவில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? என்பது குறித்த பல விடயங்களை இப்பொழுது நாம் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முறை இருந்தது. அதாவது மன்னர் இறந்த பிறகு அவருக்கு மகனாக இருக்கும் இளவரசன் மன்னர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்துவது. இந்த மன்னர் ஆட்சி முறையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே மக்களை ஆட்சி செய்யும். இத்தகைய மன்னர் ஆட்சி முறைக்கு மாற்றாக மிக சமீப நூற்றாண்டுகளில் உருவான ஆட்சி முறை தான் “குடியரசு ஆட்சி” முறையாகும்.
குடியரசு என்றால் மக்களாட்சி முறை ஆகும். குடியரசு ஆட்சியின் தலைவராக இருப்பவர் ஜனாதிபதி ஆவார். குடியரசு தலைவரை மக்கள் நேரடியாகவோ அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளோ தேர்வு செய்வர். நமது இந்திய நாட்டை பொறுத்தவரையில் இரண்டாவது முறையே பின்பற்றப்படுகிறது.
குடியரசு ஆட்சி எந்த ஒரு நபரும், அவரின் இன, மத, மொழி, நிற, பாலினம் மற்றும் சமுதாய வர்க்க வேறுபாடுகள் நீங்களாக மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்குவதில் துணை புரிகிறது. இந்திய நாடு 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த பொழுது, இத்தகைய குடியரசு ஆட்சி முறை தான் இந்திய நாட்டிற்கான சிறந்த ஆட்சி முறை எனக் கருதிய இந்திய அரசியல் தலைவர்கள் ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு இந்திய நாட்டை குடியரசு நாடக அறிவித்தனர்.
சுமார் 190 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேய மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் காலணி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த இந்திய நாடு, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. இந்தியா சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட பொழுதிலும், இந்திய நாட்டிற்கான நிரந்தரமான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை இந்தியாவின் முதல் பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு, அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த முனைவர் திரு. பி. ஆர். அம்பேத்கார் அவர்களிடம் ஒப்படைத்தார்.
திரு. பி. ஆர். அம்பேத்கர் மற்றும் அவரது குழுவினர் தங்களது அயராத உழைப்பினால் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவை நாடாளுமன்ற குழுவிடம் ஒப்படைத்தார். எனினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 26 ஆம் தேதி தான் அந்த அரசியலமைப்பு சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தது. அன்றைய தினமே இந்திய நாட்டின் முதல் ஜனாதிபதியாக திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் பதவியேற்றார். இந்த தினமே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நிய நாட்டு காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த இந்திய நாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றாலும் இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அகிம்சை முறையிலும், ஆயுதம் ஏந்தி, இரத்தம் சிந்தி, உயிர் நீத்தும் போற்றத்தக்க தியாகங்களை செய்தனர். அத்தகைய மாமனிதர்களின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற குடியரசு தினத்தன்று இந்திய தலைநகரான புது டில்லியில் இருக்கின்ற ராஜபாதை சாலையில் இந்திய முப்படைகள் உள்ளிட்ட பலவகையான அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்திய நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாகவும், இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை உருவாக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இந்திய குடியரசு தலைவர் விளங்குகிறார். எனவே தலைநகரில் நடைபெறுகின்ற இந்திய குடியரசு தின விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் தலைமை தாங்குகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் இருக்கின்ற ஏதாவது ஒரு நாட்டின் தலைவரை இந்திய குடியரசு தின விழாவில் விருந்தினராக பங்கேற்குமாறு இந்திய அரசாங்கத்தால் முறையாக அழைக்கப்படுவது வழக்கம். தலைநகர் புது டில்லியில் நடைபெறுகின்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்புகள் மற்றும் ஊர்வலங்களை காண,
இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் அந்த சிறப்பு விருந்தினரை வரவேற்று, அவரை தங்கள் அருகில் அமரச் செய்து அவருக்கு சிறப்பு செய்வதுண்டு.
புது டில்லியில் நடைபெறுகின்ற குடியரசு தின விழா தொடங்குவதற்கு முன்பாக, இந்திய குடியரசுத் தலைவர் தில்லியில் இருக்கின்ற “அமர்ஜவான் ஜோதி” எனப்படும் இந்திய நாட்டு வீரர்களின் நினைவு மண்டபத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, இந்திய நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழாவை தொடங்கி வைப்பார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமான படைகளின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் வீர – தீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். அதோடு இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்புகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற குடியரசு தின விழாவில், முப்படைகளில் நாட்டுக்காக சேவை புரிந்து உயிர் நீத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும், நாட்டிற்கு சிறப்பான சேவைகளை புரிந்த காவல்துறையினருக்கும் மற்றும் போற்றத்தக்க வீர- தீர செயல்களை புரிந்த நாட்டின் குடிமகன்களுக்கும் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி, அவர்களை கௌரவப்படுத்துகிறார்.
குடியரசு தினம் அரசு விடுமுறை நாள் என்ற பொழுதிலும் நாடு முழுக்க இருக்கின்ற ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது விதியாகும். எனவே அன்றைய தினம் அந்தந்த கல்வி நிலையங்களில் நம் நாட்டின் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் முப்படையினரை போற்றும் விதமாகவும், பலதரப்பட்ட கலாச்சாரங்களை போற்றும் விதமாகவும் பல கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
பல்லாண்டுகளாக இந்திய நாடு கடந்து வந்த துயரங்களை போக்க முயன்று பல தியாகங்களை செய்த மகத்தான மனிதர்களை நினைவு கூறும் விதமாகவும், வருங்கால இந்தியாவை சிறப்பிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கும் ஒரு மகத்தான நாளாகவும் இந்திய குடியரசு நாள் விளங்குகின்றது. எனவே இத்தகைய மகத்தான தினத்தில் நாமும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பை செய்வோம் என உறுதி ஏற்று செயல்படுவோம்.
குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி: சுதந்திர மலர் நம் மேல் தூவும் இத்தருணத்தில் நம் பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும் மற்றும் இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர காற்றின் புதிய வாசனையை நுகர்ந்து சுதந்திர மேகம் நம்மை சூழ்வதை காண இங்கு குழுமி இருக்கும் அனைவருக்கும் இந்த மாணவனின் 74 வது குடியரசு தின வாழ்த்துக்கள்.
நாம் நம் சித்தத்திலே பக்குவம் அடைய, நாம் நம் தேசத்திலே தலைநிமிர, நம்மை ஆள்பவரை நாம தீர்மானிக்க ஓர் நாள் உதவியது என்றால் அது இந்நாள் தான். என்னை பெற்ற தாயாம் பாரத தாயும், என்னை வளர்த்த தாயான தமிழ் தாயும் மகிழ்ச்சியடையும் வகையில் சுயநலத்தை கலைந்து, பொது நலத்தை பேணி அன்பெனும் பயிரை ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் விதைக்க வந்துள்ளேன்.
சும்மாவா! சுவாசித்தோம் சுதந்திரத்தை? எண்ணிப்பாருங்கள், ஒருபுறம் அண்ணல் காந்தியுடன் இணைந்து அகிம்சை வழியில் போராட்டம், மறுபுறம் தோட்டாவை எதிர்த்த சுபாசுடன் இணைந்து அதிரடிப் போராட்டம். கண்டம் கடந்து கப்பல் ஓட்டிய வீரத்தமிழனின் மனதிலும், சிறையின் படியேறி தடியில் அடி வாங்கி யுத்தம் செய்து ரத்தம் சிந்திய தலைவர்கள் அனைவரின் சிந்தையிலும் நிரம்பி இருந்தது என்ன தெரியுமா? அடுத்த தலைமுறையாவது சுதேசி காற்றை சுவாசிகட்டுமே என்ற எண்ணம் தான்.
அன்னியரையும் அன்று சபாஷ் போட வைத்தார் சுபாஷ. ஆனால் இன்று உழவர்களுக்கு அணியை கூட ஆடை பற்றாக்குறை, குணியக்கூட குடிசை பற்றாக்குறை.
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!
என்றார் பாவேந்தர். சிறையில் ஒரு நாள் கைதிகள் உண்பதற்கு ரொட்டி கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மண் ஒட்டியிருப்பதை கண்டு நேரு ஒரு ஆங்கிலேய அதிகாரியிடம் முறையினதற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி சொன்னார், நீங்கள் கேட்ட தாய் மண் தானே விழுங்குங்கள் என்றார். அதற்கு நேரு சொன்னார், நாங்கள் எங்கள் நாட்டை கேட்பது விழுங்குவதற்கு அல்ல, எங்கள் மக்களை வாழ வைக்கவே என்றார்.
உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற காலத்தில் அறிவால் கொண்டு போனானாம் என்னும் பழமொழி ஒன்று உள்ளது. இதை நம் தலைவர் ஒருவர் மிக அழகாக கூறியிருந்தார். என்ன தெரியுமா? நான் மட்டும் அரியணையில் அமர்ந்தால் முதலில் அன்னசத்திரம் அனைத்தையும் மூட செய்திருப்பேன். ஏனெனில் உழைத்தால் தானே உலகம் நம் கையில் கிட்டும்.
இன்று நாம் விவசாய நாடு என்ற பெயர் பெற்று விட்டோம். ஆனால் விவசாயிக்கு தேவையான தரமான உணவை பெறவில்லையே? விடுதலை நாடு என்ற பெயரை பெற்றுவிட்டோம். ஆனால் வல்லரசு நாடு என்ற பெயரை பெறவில்லையே? சுதந்திர நாடு என்கிற பெயரை பெற்று விட்டோம். ஆனால் சுவாசிக்கவே திணறுகிறோம், ஏன் தெரியுமா? மரத்தை வெட்டினோம் மழை நின்று போச்சு. மண்ணுல மாசு சேர்த்தோம் இன்று மருத்துவ செலவு கூடி போச்சி. ஓசோன் படலத்தில் ஓட்டை போட்டோம், இன்று நம் வாழ்க்கை படலமே வம்பா போச்சி.
ஒரு காலத்தில் நம் நாட்டை பொன் விளையும் பூமி என்றார்கள். ஆனால் நாமோ குடிக்கும் தண்ணீரையே காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் உள்ளோம். காவிரி நீர் கேட்டு கை ஏந்தி நின்றோம் ஆனால் இங்கிருக்கும் ஆறுகளையும் ஏரிகளையும் தூர்வாரி சுத்தம் செய்து இருந்தால் மூன்று வருடங்களுக்கு முன்பு பெய்த மழையே போதுமானதாக இருந்திருக்கும். செய்தோமா? இல்லையே! எனவே நண்பர்களே, துவக்கமோ தியாகிகளிடம் ஆனால் தொடர்ச்சியோ நம்மிடம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
இன்று நம் நாட்டிற்கு எது தேவை என்பதை அறிந்து, கலாமின் கனவுகளை நெனவாக்கி, உண்டு வாழ்வது மட்டுமே வாழ்வல்ல வெற்றியோடு வாழ்வதே வாழ்வு என்பதை உணர்ந்து நமக்கான வழியை வகுத்துக்கொண்டால், சுதேசி காற்றை இனிமையாக சுவாசிக்கலாம் என்று கூறி என் உரையை முடித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
குடியரசு தினம் குறித்த சில கேள்வி பதில்கள்: