வானியல் ரீதியாகவும், ஜோதிட சாஸ்திர ரீதியாகவும் சூரிய கிரகணம் என்பது மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. தற்போது ஏற்படவிருக்கின்ற சூரிய கிரகணத்தில் சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து, பிறகு ஒளி வளைய அமைப்பில் சில கணங்கள் இந்த சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதால் இதை “‘ஹைபிரிட் சூரிய கிரகணம்” என வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற அதிசய சூரிய கிரகணம் என்பதால் இது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழவிருக்கிறது. எனினும் இந்திய நாட்டில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ கூட காண முடியாது எனவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நமது நாட்டில் இந்திய நேரப்படி ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 7.04 மணி முதல் மதியம் 12.29 மணி வரை கிரகண சூத்தக நேரம் எனப்படும் கிரகண தோஷம் நீடிக்கின்றது.
கிரகண தோஷ நேரத்தில் வீட்டில் பூஜை, இறை வழிபாடு போன்றவற்றை செய்யக்கூடாது. சுவாமி படங்களையோ, விக்கிரகங்களையோ தொடக்கூடாது. அப்படி தொட்டால் கிரகணம் முடிந்த பிறகு அந்த சுவாமி படங்களையும், விக்கிரகங்களையும் மஞ்சள் கலந்த நீரால் நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகே மீண்டும் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
சூரிய கிரகணத்தின் பொழுது ஏற்படும் தோஷ நேரத்தில் உணவுப் பொருட்களை சமைப்பதோ, உண்பதோ கூடாது. கிரகண தோஷ நேரத்தில் உறங்க கூடாது. வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் மட்டும் இதிலிருந்து விளக்கு பெறுகிறார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சூரிய கிரகண தோஷ நேரத்தின் பொழுது புதிய நிலம், வாகனம் மற்றும் இன்ன பிற புதிய பொருட்களை வாங்க கூடாது. கிரகண தோஷ நேரத்தில் கூர்மையான பொருட்களை பயன்படுத்தி செய்யும் காரியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சூரிய கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை
சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு முன்பாக, உங்கள் வீட்டு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களில் சிறிது தர்ப்பைப்புல் அல்லது கருந்துளசி இலைகளை போட்டு வைக்க வேண்டும்.
மந்திர உச்சாடனம், மந்திர தீட்சை பெறுதல் போன்றவற்றிற்கு சிறந்த நேரமாக கிரகண காலங்கள் திகழ்கின்றன. கிரகண நேரத்தில் செய்யப்படுகின்ற மந்திர ஜெபத்திற்கு மற்ற நேரங்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பலன் அதிகம். எனவே சூரிய கிரகணம் ஏற்படும் வேளையில் ஆன்மீக குருக்களிடம் மந்திர தீட்சை பெறலாம்.
உங்கள் ஊரில் இருக்கின்ற ஆறு, குளம் போன்றவற்றில் கழுத்தளவு நீரில் மூழ்கி, நின்று கொண்டு கிரகணம் தொடங்கி முடிகின்ற வரை மந்திர ஜப பாராயணம் செய்யலாம். நீர் நிலைகளில் இத்தகைய மந்திர ஜபம் செய்கின்ற பொழுது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே குறிப்பிடத்தக்கது.
சூரிய கிரகணம் நீங்கிய பிறகு வீடு முழுவதும் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். முடிந்தால் “கங்காஜலம்” எனப்படும் கங்கை நீரை வீடு முழுக்கவும் தெளித்து விடுவதால் சூரிய கிரகணத்தால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
குடும்பத்தில் இருக்கின்றவர் அனைவரும் தலை மூழ்கி குளித்துவிட்டு, பழைய ஆடைகளை களைந்து புத்தாடைகளை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வரவிருக்கும் குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்.
கிரகணம் நீங்கியதும் உடல் ஊனமுற்றவர்கள், வறுமை நிலையில் இருக்கின்ற பெண்கள், குழந்தைகள் போன்றவருக்கு உங்களால் இயன்ற தான, தர்மங்களை செய்வதால் மற்ற காலங்களில் செய்யப்படுகின்ற தான, தர்மங்களை விட பன்மடங்கு புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும்.