
சிலரது இல்லங்களில் வாரத்திற்கு ஒரு முறை மாவரைத்துவிட்டு காலையிலும், இரவிலும் தோசை ஒன்றை மட்டுமே ஊற்றி வீட்டில் இருக்கும் நபர்களுக்கு கொடுப்பார்கள். அந்த வேலை ஈசியாக முடியும் என்று நினைத்து இப்படி செய்வார்கள். அதனாலேயே அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு தோசை என்றதும் போர் அடித்து விடும். அப்படி தோசை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இப்படி ஒரு முறை இந்த காய்கறியை வைத்து தோசை ஊற்றி கொடுங்கள். இனிமேல் தோசை தான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு சுவையில் அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட தோசையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தோசையில் பலவிதமான தோசைகள் இருக்கின்றன. நாம் ஒரு தோசையை ஊற்றிவிட்டு அதன் மேல் வெங்காயத்தை தூவினால் வெங்காய தோசை, தக்காளி தூவினால் தக்காளி தோசை இப்படி ஏதாவது ஒன்றை தோசை என்று கூறிய ஏமாற்றி கொடுத்து விடலாம். ஆனால் சுவை என்று பார்க்கும் பொழுது அந்த அளவுக்கு இருக்காது என்று தான் கூற வேண்டும். முறையாக ஒரு தோசையை செய்வதற்குரிய பக்குவத்தை தெரிந்து அதற்கேற்றார் போல் செய்தால் தான் அந்த தோசையின் ருசி அருமையாக இருக்கும்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது சௌசௌ தோசை. இதற்கு நாம் மாவு தயாரித்த உடனையே தோசை ஊற்றி விடலாம். மாவு தயாரிப்பதற்கு பச்சரிசி மட்டுமே போதுமானதாக இருக்கும். தோசை ஊற்றுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு கப் பச்சரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து அந்த பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த கப்பில் நாம் பச்சரிசியை அளந்தோமோ அதே கப்பில் அரை கப் அளவிற்கு தேங்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று பச்சை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இரண்டு சௌசௌகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோலை நன்றாக சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த சௌசௌவை கேரட் உரசுவது போல் பொடியான கண்ணில் உரசி எடுத்துக் கொள்ளுங்கள். துருவிய சௌசௌ ஒரு கப் இருக்கும் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதை மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அந்த மாவை நன்றாக கலந்து விட்டு தோசை ஊற்றிக் கொள்ளலாம். சிறிது கனமாக ஊற்றி தோசைக்கேற்றவாறு காரசாரமான சட்னியை வைத்து கொடுப்பதன் மூலம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுவார்கள்.
வெறும் பச்சரிசியை மட்டும் வைத்து இப்படி அருமையான ஒரு தோசையை செய்து கொடுத்து பாராட்டை பெறுங்கள்.