- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இவற்றை பின்பற்றாததால் தான் நோய்கள் விரைவாக நம்மை நெருங்குகிறது. எமனையும் விரட்ட தேரையர் பாடலை கேளுங்கள்.

‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்கு கொடு’ இந்த பழமொழியின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நீங்கள் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால் என்ன ஆகும்? உடலுக்கு நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்று செலவு செய்ய நேரிடும், அல்லவா? அதற்காகத் தான் நம் முன்னோர்கள் இவ்வாறு கூறி சென்றுள்ளனர். வாணியன் என்றால் வாணிபம் செய்பவன் என்று அர்த்தம். நல்ல பொருட்களை கடைகளிலிருந்து செலவு செய்து வாங்கி உண்பதற்கு கணக்கு பார்க்க கூடாது. அப்படி கணக்கு பார்த்தால் வீணாக மருத்துவரிடம் சென்று தான் செலவு செய்ய வேண்டும். இதுவே அந்த பழமொழியின் பொருள்.

இன்று நம்மை சுற்றி இருக்கும் பலரும் இந்த பழமொழியை பின்பற்றுவதே இல்லை. வீண் ஆடம்பரத்துக்கும், செலவுகளுக்கும் தாராளமாக இருக்கும் அவர்கள், உடலுக்கு எது நல்லதோ அதை அதிக விலை கொடுத்து வாங்குவதில் பின்வாங்குகின்றனர். இதனால் பலதரப்பட்ட நோய்கள் எளிதில் உங்களை தாக்குகிறது. இதற்கு தேரையர் சரியான வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளார். அதைப்பற்றிய விரிவான அலசல்கள் இப்பதிவில் காணலாம்.

- Advertisement -

இன்று நீங்கள் உபயோகிக்கும் எண்ணையில் எவ்வளவு கலப்படம் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதை எத்தனை பேர் ஒதுக்கி வைக்கின்றனர்? கேட்டால், என்ன செய்வது? அது தான் விலை குறைவு என்று கூறுவார்கள். இதனால் உங்கள் உடல் நலம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள். இன்றும் செக்கில் ஆட்டும் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. அல்லது நம் கண் முன்னே ஆட்டியும் தருகின்றனர். அவர்களிடம் 20 கிலோ எள்ளை வெயிலில் நீர் வற்றக் காய வைத்து கொண்டு போய் கொடுத்தால், 10 லிட்டர் எண்ணெய் எடுத்து தருவார்கள். அந்த எண்ணெய் உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் பயன்படுத்தி வந்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது.

எண்ணெய் குளியல் செய்தால் எமனும் நம்மை நெருங்க முடியாது. இது எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்தும் இந்த காதில் வாங்கிக்கொண்டு அந்தக் காதில் விடுபவர்கள் ஏராளம். ஆண்கள் ஆயின் புதன்கிழமையும், சனிக்கிழமையும், பெண்களாயின் செவ்வாய், வெள்ளியிலும் தவறாமல் எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு தடவும் அந்த எண்ணெயில் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூடு இவற்றை தட்டிப்போட்டு புகை வராமல் காய்ச்சி உடல் முழுவதும் ஊறவைத்து ஒரு குளியல் போட்டால் வராத நித்திரையும் சுகமாக வந்துவிடும். உடலில் இருக்கும் உஷ்ணம் அனைத்தும் வெளியேறி உடலும்., உள்ளமும், கண்பார்வையும் தெளிவடையும்.

- Advertisement -

தலை காய வைக்க ‘ட்ரையரை’ பயன்படுத்தாமல் சாம்பிராணி புகை போடுவது அவ்வளவு நன்மை தரும். சாம்பிராணியில் துளசி பொடி அல்லது நிலவேம்பு பொடியை தூவி புகைப்பிடித்தால் எந்தவிதமான சளியும், கபமும், பிணியும் உங்களை நெருங்காது. எண்ணெய் குளியல் செய்ய முடியாதவர்கள் இந்த வழி முறையை பின்பற்றலாம். பாக்கு மர தட்டு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் நிரம்ப நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதில் கால்களை சிறுது நேரம் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் உள்ளுக்குள் ஏறி கண்களில் ஒருவித உணர்வு உண்டாகும். அச்சமயத்தில் காலை எடுத்து விடலாம். இதுபோன்று செய்வதால் எண்ணெய் குளியல் செய்த பலன் கிடைக்கும். எண்ணெய் குளியல் செய்தபின் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். மது அருந்தக்கூடாது, புகைப்பிடித்தல் கூடாது, வெற்றிலைபாக்கு போடக்கூடாது, வெயிலில் திரியக்கூடாது, உணவில் காரம் சேர்க்கக் கூடாது, தூங்கக் கூடாது.

தேரையர் அருளிய வைத்திய காவியம் :
பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்;
பகலில் புணரோம்; பகலில் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்;
இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையிற்படுப்போம்;

- Advertisement -

மூலஞ்சேர் கறிநுகரோம்; மூத்த தயிர் உண்போம்;
முதல்நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்;
ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்;

மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருத்தல் செய்யோம்;
நண்புபெற உண்ட பின்னர் குறுநடை பயில்வோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருகால் பேதியுரை நுகர்வோம்;
கேறுமதி ஒன்றைக்கோர் தரநசியும் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவி ருப்புறுவோம்;

வீறுசதுர் நாட்கொருக்கால் நெய்முழுக்கைத் தவிர்ப்போம்;
விழிகளுக் கஞ்சனம் மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகாந்தம் புட்பமிவை நடுநிசியில் நுகரோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

பகத்தொழுக்கு மாதர் அசம்கரம் துடைப்பமிவை தூள்;
படநிற்கோம்; தீபனமாந்தர் மரநிழலில் வசியோம்;
சுகப்புணர்ச்சி அசனவச னத்தருணஞ் செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோக மழுக்காடை;

வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவை மாலை விரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர் சற்குருவை விடமாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மசைகோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே.

இந்த பாடலில் பொருள் என்னவென்றால், நாட்டு மாட்டின் பாலை தான் உண்ண வேண்டுமாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். தகாத உறவு கொள்ளக் கூடாது. இளவெயில் உடலுக்கு நல்லது. உடல் உபாதைகளை அடக்கி வைத்திருக்க கூடாது. தூங்கும் பொழுது இடதுகை பக்கமாக ஒருக்களித்து தான் படுக்க வேண்டும். உணவில் புளித்த தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறி சமைத்தால் மறுநாள் வரை வைத்துக் கொள்ளக்கூடாது. பசி எடுத்த பின்னரே உணவு அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு அருந்தினால் போதும். பகல் தூக்கம் தவறானது. இரவில் நன்றாக உறங்க வேண்டும். மாதம் ஒருமுறை மனையாளோடு. கிழங்கு வகைகளில் கருணை நல்லது. சாப்பிடும் போது இடை இடையே நீர் அருந்தக்கூடாது. முற்றிய வாழைக்காயை பயன்படுத்தக்கூடாது. பிஞ்சு வாழைக்காய் சிறந்தது. சாப்பிட்ட பின் நடை பயிற்சி அவசியம். ஆறு மாதம் ஒருமுறை உடலை சுத்தம் செய்ய பேதி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை ஆண்கள் சவரம் செய்துகொள்ள வேண்டும். இரவில் வாசமிக்க மலர்களைக் முகர்ந்து பார்க்கக் கூடாது. கை நகம், தலை முடி உதரக் கூடாது. அதிலிருந்து வெளி வரும் நீர் அடுத்தவர் மீது படக்கூடாது. இவற்றை பின்பற்றினால் எந்த நோய்களும் நெருங்காது.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு வேண்டாத எதிரிகள், உங்களை பற்றி வேண்டாத வதந்திகளை பேசிக்கொண்டே இருக்கிறார்களா? எதிரிகளின் வாயை மூட 1 வசம்பு போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Theraiyar siddhar padalgal in Tamil. Theraiyar siddhar songs. Theraiyar pini anuga vidhi in Tamil. Theraiyar noi anuga vidhi.

- Advertisement -