எந்த ஒரு பணியிலும் தகுதிகள் செயல்களுக்கேற்றவாறு பதவிகள் இருக்கின்றன. அனைவராலும் உயர்ந்ததாக கருதப்படுவது தேவலோகம் அல்லது இந்திரலோக பதவி. அந்த தேவலோகத்தை ஆளும் மிகவும் உயர்ந்த பதவியை பெற்றவர் இந்திரன் ஆவார். சூழ்நிலையால் இழந்த தனது இந்திர பதவியை மீண்டும் இந்திரனுக்கு அளித்த “திருக்காட்டுப்பள்ளி அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்” பற்றிய சிறப்புக்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.
2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது ஆரண்யேஸ்வரர் கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் ஆரண்யேஸ்வரர் எனவும் அம்பாள் அகிலாண்டேஸ்வரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாக இது இருக்கிறது. திருஞானசம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற கோயிலாகும் இது. “ஆரண்ய” முனிவர் இங்கு வந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டதால் அந்த முனிவரின் பெயராலேயே ஆரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் இங்குள்ள சிவபெருமான்.
இக்கோயிலின் புராணங்களின் படி பிரம்ம தேவனிடம் வரத்தை பெற்ற விருத்தாசுரன் என்கிற அசுரன் தேவர்களுக்கு தொல்லை கொடுக்க, தேவர்களின் தலைவனான இந்திரன் விருத்தாசுரனுடன் போரிட்டு அவனை கொன்றதால் “பிரம்ம ஹத்தி” தோஷம் ஏற்பட்டு பிரம்மனின் சாபம் பெற்றதோடு, தேவலோக பதவியையும் இழந்தான். இது குறித்து குருபகவானிடம் ஆலோசித்த இந்திரனுக்கு பூலோகத்தில் சிவபெருமானை தவமிருந்து வழிபட்டால் இழந்த பதவியை திரும்ப பெறலாம் என இந்திரனுக்கு அறிவுரை வழங்கினார் குரு பகவான்.
பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட இந்திரன் அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தை முறைப்படி பூஜைகள் செய்து வழிபடலானான் இந்திரன். இந்திரனின் பூஜையை ஏற்று அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் நியாயமான விடயங்களுக்காக செய்யப்படும் எத்தகைய காரியங்களுக்கும் பாவப்பலன் கிடையாது என்று கூறி இந்திரனின் சாபத்தை போக்கி, அவனுக்கு மீண்டும் தேவலோக பதவி கிடைக்கச் செய்தார் சிவபெருமான்.
இங்கிருக்கும் ஆரண்யேஸ்வரரின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். இக்கோயிலில் இருக்கும் விநாயகர் நண்டு விநாயகர் என அழைக்கப்படுகிறார். முனிவரின் சாபத்தால் நண்டாக பிறந்த கந்தர்வன் ஒருவன், நண்டு வடிவத்திலேயே இங்குள்ள விநாயக பெருமானை வழிபட்டு சாப விமோச்சனம் பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது. இந்த விநாயகருக்கு மூசிக வாகனத்திற்கு பதிலாக நண்டு தான் வாகனமாக இருக்கிறது.
இக்கோயில் பிரகாரத்தில் தச லிங்க சந்நிதி இருக்கிறது. இங்கு ஏழு லிங்கங்கள் இருக்கின்றன. மேலும் ஒரே லிங்கத்தில் இரண்டு நாண்கள் இருக்கும் லிங்கம் எங்கும் காணக்கிடைக்காத அம்சமாகும்.இக்கோயிலில் ஸ்வாமியே பிரதானம் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி கிடையாது. இங்கு கோயில் கொண்டிருக்கும் “ராஜயோக தட்சிணாமூர்த்தி” வழக்கமான நான்கு சீடர்களுக்கு பதிலாக ஆறு சீடர்களுடன் இருப்பது ஒரு அதிசய அமைப்பாகும்.
தங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள், பதவி உயர்வுகள் போன்றவற்றால் தடை தாமதங்கள் உண்டானவர்கள். தாங்கள் நியாயமாக செயல்பட்டும் தங்களின் பதவிகளை இழந்தவர்கள் இங்குள்ள இறைவனான ஆரண்யேஸ்வரருக்கும், ராஜயோக தட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் சாற்றி வழிபட்டால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கப்பெறும் என்றும், பதவி உயர்வுகளில் இருக்கும் தடை தாமதங்கள் போன்றவை நீங்கும் என்பது இங்கு வந்து வழிபட்டு அனுபவம் பெற்ற பக்தர்களின் அனுபவமாக உள்ளது.
அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளி என்கிற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்ல சீர்காழி, நாகை நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருக்காட்டுப்பள்ளி
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 114
4364 – 256273
இதையும் படிக்கலாமே:
காத்தாயி அம்மன் கோயில் சிறப்புக்கள்
இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
English overview:
Here we have Thirukattupalli shiva temple in Tamil. Raja yoga dakshinamurthy in Tamil or Aranyeshwar temple thirukattupalli in Tamil or Thirukattupalli koil in Tamil or Thirukattupalli aaranyeswarar in Tamil.