
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். அப்படி சம்பாதிக்கும் பணமானது சேமிப்பாக உயரும் பட்சத்தில் நம்முடைய பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சமூகத்தில் ஒரு நல்ல உயர்வை பெறுவோம். ஆனால் இந்த பணம் சேமிப்பாக உயராமல் வீண் விரயமாக இருந்தால் தேவை இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இப்படி வீண்விரயம் ஏற்படாமல் நாம் சம்பாதிக்கும் பணமானது சேமிப்பாக உயர்வதற்கு சம்பள பணத்தை வைத்து செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
உழைக்கக்கூடிய ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களுடைய உழைப்பிற்குரிய ஊதியத்தை பெறுவார்கள். பிறரிடம் வேலை செய்பவர்கள் வார சம்பளமாகவோ அல்லது மாத சம்பளமாகவோ வாங்குவார்கள். தொழில் செய்பவர்களோ அவர்களுடைய தொழிலுக்கு ஏற்றார் போல் வருமானத்தை பெறுவார்கள். இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு என்பது இருக்கத்தான் செய்யும். மாத சம்பளம் வாங்குபவர்கள் சம்பளம் வாங்கியதும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஒரு வேளை தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் அல்லது வார சம்பளம் வாங்குபவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த மாதம் தொடங்கியதும் முதல் முறை பெறக்கூடிய வருமானத்தை வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
சம்பள பணத்தை வாங்கி வந்த பிறகு வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மேல் சிவப்பு நிற துணியை விரித்து அதற்கு மேல் சிறிதளவு பச்சரிசியை வைத்து அந்த பச்சரிசிக்கு மேல் நாம் வாங்கி வந்த சம்பளத்தை வைக்க வேண்டும். அந்த சம்பள பணத்துடன் ஏதாவது ஒரு நாணயத்தையும் வைத்து வாசனை மிகுந்த மலர்களை அதற்கு மேல் வைக்க வேண்டும். பிறகு கற்பூர தூப தீப ஆராதனை காட்டி அந்த பணத்தை தொட்டு வணங்க வேண்டும்.
இந்த பணம் அதே இடத்தில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும். பிறகு அந்த பணத்தில் இருந்து ஒரே ஒரு நோட்டு மற்றும் நாம் வைத்த சில்லரை நாணயத்தையும் எடுத்து ஒரு சிவப்பு நிற துணியில் மூட்டையாக கட்டி, பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இதை செலவு செய்யக்கூடாது. மீதம் இருக்கக்கூடிய பணத்தை எடுத்து அந்த பணத்திலிருந்து முதல் செலவாக முன்பின் அறிமுகம் இல்லாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய யாராவது ஒருவருக்கு சாப்பாடு வாங்கித் தர வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதத்திலும் நாம் பெறக்கூடிய முதல் வருமானத்தை வைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்களுடைய வருமானம் சேமிப்பாக உயரும் வீண்விரயம் குறையும். சிவப்பு நிற துணியை அடுத்த மாத வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சரிசியை பறவைகளுக்கு தானம் ஆகவும் தரலாம் நாமும் சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: சாதாரண ஜாதகமும் யோகமான ஜாதகமாக மாற
எளிமையான இந்த வழிபாட்டை முழு மனதோடு எந்தவித சந்தேகமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு ஒவ்வொரு மாதமும் வருமானம் வந்தவுடன் செய்பவர்களுக்கு அவர்களுடைய வருமானம் சேமிப்பாக உயரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.