
வெற்றிலையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அந்த காலத்தில் நம்முடைய தாத்தா பாட்டி இந்த வெற்றிலை போடும் பழக்கத்தை வைத்து இருந்தார்கள். காலப்போக்கில் பூஜைக்கு கூட இப்போது நாம் வெற்றிலையை பயன்படுத்தாமல் போய்விட்டோம். நெஞ்சு சளி நீங்க, ஜீரண சக்தியை அதிகப்படுத்த, குளிர்காலத்தில் வாரம் ஒரு முறை இந்த வெற்றிலை துவையலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவது நன்மை தரும். வெற்றிலையை அப்படியே வாயில் போட்டு மென்றால் தான் பிடிக்காது. சரி துவையலாவது செய்து சாப்பிடுவோம். நாவிற்கு சுவை தரும் காரசாரமான வெற்றிலை துவையல் ரெசிபி உங்களுக்காக.
முதலில் ஒரு 10 வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள். வெற்றிலையில் இருக்கும் காம்பு பகுதியை சேர்ந்த நரம்பை நீக்கிவிட்டு, வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கட்டி பெருங்காயம் – சிறிய துண்டு, வெந்தயம் – 1/4 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடலை பருப்பு – 2 ஸ்பூன், வரக்கொத்தமல்லி – 2 ஸ்பூன், வரமிளகாய் – 6, இந்த பொருட்களை சேர்த்து முதலில் சிவக்க சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். இறுதியாக எள்ளு – 1 ஸ்பூன், மிளகு – 15, சேர்த்து ஒருமுறை இலேசாக வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்களை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும்.
இப்போது அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய – 4 தக்காளி பழங்களை போட்டுக் கொள்ளுங்கள். கூடவே பெரிய நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து இந்த தக்காளியை சுருள சுருள வதக்கி, தக்காளியை இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பாக வெட்டி வைத்திருக்கும் வெற்றிலைகளை தக்காளியுடன் சேர்த்து 2 நிமிடம் போல மீண்டும் வதக்கி, அடுப்பை அணைத்து விடுங்கள்.
தக்காளி நன்றாக ஆறிய பின்பு இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போடவேண்டும். ஏற்கனவே மசாலா பொருட்களை வறுத்து அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா? அந்த மசாலா பொடியுடன் இந்த தக்காளியுடன் வதக்கி வைத்திருக்கும் வெற்றிலையையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சம் கொரகொரப்பாக இந்த துவையலை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மிக்ஸி ஜாரில் அரைத்த இந்த துவையலை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணையில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கலந்து பரிமாறுங்கள். அருமையான இந்த வெற்றிலை துவையலை சூப்பராக இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அருமையான ருசி.
இந்த துவையலை வெள்ளை வெற்றிலையில் அரைத்தால், வெற்றிலையின் காரம் கொஞ்சம் குறைவாக இருக்கும். வெள்ளை வெற்றிலைக்கு பதிலாக, கறுப்பு வெற்றிலை சேர்த்தால் காரம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதற்கு தகுந்தது போல வரமிளகாய் மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். மிஸ் பண்ணாதீங்க. இந்த ரெசிபியை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.