இந்த உலகில் இருக்கும் மனிதர்கள் இன, மத, நிற, மொழி பேதங்களால் பிரிந்து கிடந்தாலும், அவர்கள் அனைவருமே சூரிய மண்டலத்தில் இருக்கின்ற நவ கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டு தான் இருக்கின்றனர் என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நவ கிரகங்கள் நம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என அனுபவத்தில் கண்டுணர்ந்த நம் முன்னோர்கள், அந்த நவக்கிரகங்களால் நம் வாழ்க்கையில் தீய பலன்கள் ஏற்படாமல், நன்மைகள் மட்டும் ஏற்பட மந்திரங்கள், பூஜை முறைகள் போன்றவற்றை உருவாக்கி கொடுத்துள்ளனர். அந்த வகையில் நம் வாழ்வில் நவக்கிரக தோஷங்கள் நீங்க நமக்கு கிடைத்துள்ள ஒரு அற்புதமான மந்திர பாடல் தான் “கோளறு திருப்பதிகம்”
தமிழ் சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவார பாடல்களை இயற்றினார். அவர் இயற்றிய இந்த தேவார பாடல்கள் தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் சைவ திருமுறைகளாக இருக்கின்றன. இப்படி ஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறை சைவ பதிகங்களில், இரண்டாவதாக இடம் பெற்றிருப்பது தான் இந்த “கோளாறு திருப்பதிகம்”.
மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த கோளறு திருப்பதிக பாடல்களும், அதற்கான பொருள்விளக்கமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே
னுளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
இந்த பதிகத்தை சிவபெருமானின் மீது முழு நம்பிக்கையுடன் போதும் பக்தர்களுக்கு நவகோள்களால் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கிறது.
எண்பொடு கொம்பொடாமை யிவை
மார்பி லங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே
னுளமே புகுந்த வதனால்
ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு
முடனா யநாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பொருள்
ஒவ்வொரு தினமும் வருகின்ற நட்சத்திர திதியும், இன்ன பிற தினங்களும் இப்பதிகத்தை படிப்பவர்களுக்கு எத்தகைய கெடு பலன்களையும் ஏற்படுத்தாது எனவும், அதற்கு மாறாக நன்மைகளையே அளிக்கும் எனவும் இப்பாடல் வரி தெரிவிக்கின்றது.
உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
செல்வக் கடவுளாகிய திருமகள், காக்கும் தெய்வமான துர்க்கை, உலகின் எட்டுத் திசை ஆளுகின்ற அஷ்டதிக் பாலகர்கள், பூமியை ஆளுகின்ற பூமாதேவி ஆகிய தெய்வங்கள் சிவபெருமானின் ஆணைக்கு உட்பட்டு இயங்குவதால் பக்தர்களுக்கு நன்மையே புரிவார்கள் எனவும், அவர்களுக்கு செல்வங்களும் இன்னபிற இன்பங்களும் முறையே வந்துசேரும் எனவும் இந்த பாடல் வரி கூறுகின்றது.
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோ துமெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பொருள்
கூற்றுவன் எனப்படும் எமதர்மன்,, அக்னி பகவான், எமதர்மனின் தூதுவர்கள் ஆகியோர் இப்பதிகத்தை ஓதுகின்ற சிவபெருமானின் அடியார்களுக்கு துன்பங்களை தராமல், அவர்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார்கள் எனவும், மேலும் அவர்களுக்கு கடும் துன்பம் தரும் நோய்களும் ஏற்படாமல் காக்கப்படுவார்கள் என தெரிவிக்கின்றது.
நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
கொடிய குணம் கொண்ட அரக்கர்களும், பஞ்சபூதங்களும் இந்த பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவர்களுக்கு தீமையை ஏற்படுத்த முடியாது எனவும், மாறாக அவர்களால் சிவனின் அடியவர்களுக்கு நன்மைகள் உண்டாகும் எனவும், இல்லாமை ஆகிய வறுமை நிலை இப்பதிகத்தை ஓதுபவர்களுக்கு ஏற்படாது எனவும் இப்பாடல் வரி தெரிவிக்கின்றது.
வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்
மடவா டனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
கோளரியுழு வையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
சிங்கம், புலி, கொல்லும் பலம் கொண்ட யானை, கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு, கரடி முதலான விலங்குகளால் இப்பதிகத்தை ஓதும் சிவனடியார்களுக்கு ஆபத்து ஏற்படாது எனவும், மாறாக நன்மைகள் உண்டாகும் என கூறுகின்றது.
செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பொருள்
இப்பதிகத்தை ஓதுகின்ற சிவனடியார்களது உடலில் வெப்பம், குளிர் தன்மைகள், வாதம், பித்தம் முதலான நாடிகள் அவற்றின் சீரான செயல்பாட்டில் இருந்து வழுவாமல் இருந்து சிவனின் அடியவர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும் என கூறுகின்றது.
வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து
மடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு
மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பொருள்
சிவபெருமான் வாசம் புரியும் கையிலை மலையை இலங்கை வேந்தன் இராவணன் தூக்க முற்பட்ட பொழுது அவனுக்கு பெரும் இடர்கள் உண்டானது. அத்தகைய இடர்கள் ஏதும் இப்பதிகத்தை துதிக்கின்ற சிவனடியார்களுக்கு ஏற்படாது என கூறுகின்றது.
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்
அடியாரவர்க்கு மிகவே.
பிரம்ம தேவன், ஸ்ரீமன் நாராயணன், நான்கு மறைகள், தேவர்கள் ஆகியோர் இந்தப் பதிகத்தை பாடுகின்ற சிவனடியார்களுக்கு நன்மைகளையே புரிவார்கள் எனவும், அனைத்து விதமான காலங்களும், கடலும், மேரு மலையும் கூட அடியார்களுக்கு நன்மைகளையே செய்யும் என இந்த கூறுகின்றது.
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல்
திருநீரு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பொருள்
புத்த மதத்தினரையும், சமண மதத்தினரையும் வாதில் வெல்லும் தன்மை கொண்டது சிவபெருமானின் திருநீறு ஆகும். இப்பதிகத்தை பாடுகின்ற சிவபெருமானின் அடியவர்களுக்கு எவ்விதமான துன்பமும் ஏற்படாது காத்து நிற்கும் தன்மை சிவபெருமானின் திருநீறுக்கு உண்டு என இந்த பாடல் வரி தெரிவிக்கிறது.
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்
தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே.
பொருள்
இப்பதிகத்தை ஓதுகின்ற சிவபெருமானின் அடியவர்களுக்கு நாளும், கிழமையும், கோள்களும் நட்சத்திரங்களும் நன்மையை செய்யும். இது நம் ஆணை என இப்பாடல் வரி திருஞானசம்பந்தர் கூறும் வகையில் தெரிவிக்கின்றது.
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இந்த கோளறு திருப்பதிகம் பாடலை நாம் தினமும் பாடினால் எந்த ஒரு தோஷமும் அணுகாது என்று கூறப்படுகிறது. இப்பாடலில் அமைந்துள்ள ஒவ்வொரு வரிகளும் சிவபெருமானை போற்றும் விதமாக அமைந்துள்ளது. சிவபெருமானை நினைத்து இப்பாடலை பாடுபவர்களுக்கு நவகிரகங்களில் எந்த கிரகங்களாலும் உண்டாகக்கூடிய தோஷங்கள் அண்டுவதில்லை. குறிப்பாக தீராத பிணி எல்லாம் தீர்வதாக நம்பப்பட்டு வருகிறது. பாடலில் இருக்கும் குறிப்புகளும் இதையே பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் பாடலில் நவ கிரகங்களால் ஏற்படக்கூடிய எந்த தோஷங்களும் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு ஏற்படுவதில்லை என்றும், இரண்டாவது பாடலில் பயணங்களுக்கும் ஒவ்வாத நட்சத்திரங்கள் கூட நல்ல நட்சத்திரங்களாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது பாடல் சிவனடியார்களுக்கு மூலம் எல்லா திசைகளில் இருந்தும் காக்கும் தெய்வங்கள் நன்மையைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள் என்றும் அழகாக கூறியுள்ளார்.
நான்காவது பாடலில் ஜுரமும், நெருப்பும், எமனும், எமதூதர்களும் கூட சிவபெருமானை வணங்குபவர்களை ஒன்றும் செய்ய முடியாதாம். ஐந்தாம் பாடலின் மூலம் பஞ்சபூதங்களும் சிவனடியார்களை பார்த்து அஞ்சி நடுங்கும் என்றும், ஆறாம் பாடலில் கொடிய வனவிலங்குகளும் சிவனை வணங்குபவர்களை ஒன்றும் செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாம் பாடலின் மூலம் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு வெப்ப காய்ச்சல், குளிர்காய்ச்சல், வாதம், பித்தம் போன்ற எந்த நோய்களும் வருவதில்லை, வந்தாலும் அவற்றால் பாதிப்புகள் இருக்காதாம். அதுபோல் எட்டாம் பாடலில் ஏழு கடல்கள் சூழ்ந்த இலங்கை இராவணன் போன்ற அரக்கனாலும், ஆழ்கடலில் வாழும் உயிரினங்களாலும் சிவனை வணங்குபவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
ஒன்பதாம் பாடலில் மற்ற கடவுள்களையும், தேவர்களையும் கூட தாக்கும் காலன் சிவனடியார்களுக்கு நல்லதே செய்யுமாம். பத்தாம் பாடலில் எத்தகைய மதவாத போரும் சிவனை வணங்குபவர்களுக்கு நல்லவையாக மாறுமாம். பதினோராம் பாடலின் முடிவில் தான் எழுதிய இந்த பாடலை. பாடுபவர்களுக்கு பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் இயங்குகின்ற 9 கோள்களை தாண்டி அதாவது நவகிரகங்களை தாண்டி நல்லதே நடக்கும் என்று உறுதி கூறுகிறார்.
இப்பாடலை நாமும் தினமும் பாடி காலத்தை வெல்வோமாக! ஓம் நமச்சிவாய!!
இதையும் படிக்கலாமே
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே! எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அந்த 2 பொருள் என்னென்ன?