நமது வாழ்வில் எண்ணிலடங்கா பல துயரங்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. யாருக்கும் எந்த ஒரு கெடுதலையும் நினையாத மனம் கொண்டவராக நாம் இருந்தாலும் கூட நமது வாழ்வில் ஏன் இதனை தடைகள் , நமக்கு நல்லகாலம் வராதா என்று பலர் துயரப்படுவதுண்டு. இதற்கான காரணமாக இருப்பது நமது பூர்வ வினை பாவ தோஷங்களே. அதிலும் ஏழரை சனி காலத்தில் சொல்லவே தேவை இல்லை. எங்கிருந்து எந்த வழியாக பிரச்சனை வரும் என்றே தெரியாது. ஒன்று போனால் இன்னொன்று என்று வரிசையாக பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறதே, என்ன செய்வது என்று பலரும் புலம்புவதுண்டு. கவலை வேண்டாம், சனியால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் ஓர் அற்புத கோவில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள் மிகு சனீஸ்வரன் திருக்கோவில். இங்கு 21 அடியில் சிலை கொண்டு கனிவான பார்வையோடு கம்பீரமாக காட்சி தருகிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகவானை குடும்பத்தோடு சென்று தரிசித்து அவர் முன்பு சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து, நமது குறைகளை தீர்த்து சிறப்பான வாழ்வளிக்க வேண்டும் என்று மனதார வேண்டினால் நன்மை பிறக்கும்.
இத்திருத்தலத்தில் சனி பகவானோடு சேர்த்து, கணபதி, சிவன் பார்வதி, ஆஞ்சநேயர், தண்டாயுதபாணி என பல கடவுளின் பிரமாண்ட சிலைகள் உள்ளன. இங்குள்ள பஞ்சமுக ஈஸ்வரரின் சிலை 11 அடி உயரம் கொண்டது. அதேபோல இங்கு 18 அடியில் பிரமாண்டமான துர்க்கை சிலையும் உள்ளது. இங்குள்ள கணபதியின் சிலை தேசிங்குராஜா காலத்தில் அவரால் வழிபடப்பட்ட சிலை என்று கூறப்படுகிறது.
இங்குள்ள சனிபகவானையும் துர்கை அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, சூரிய காயத்ரி மந்திரம் அதை 108 முறை ஜபித்தவாறு சனிபகவானுக்கு தாமரை மலரை சமர்ப்பித்தால் ஏழரை சனி உள்ளிட்ட அனைத்து விதமான சனி தோஷங்களில் இருந்தும் விடுபட்டு சிறப்பான வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே:
சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020 வரை
இந்த கோவிலின் நடை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். அதோடு சனிக்கிழமைகளில் இங்கு சனிபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வது நல்லது.