பொதுவாக பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் இருபதாம் நூற்றாண்டை தொழிற்புரட்சி நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த இரண்டு நூற்றாண்டு காலங்களில், மற்ற எந்த நூற்றாண்டுகளிலும் இல்லாத அளவிற்கு தொழில் புரட்சியும், விஞ்ஞான புரட்சியும் ஏற்பட்டு மக்களுக்கு மிகவும் மிகவும் பயன்படும் வகையிலான பல வகை கண்டுபிடிப்புகள் உருவாகின. எனினும் எந்த அளவிற்கு இந்த தொழிற்புரட்சி என்பது உலகெங்கிலும் மனிதர்களின் வாழ்வை முன்னேற்றியதோ, அதே அளவிற்கு நாம் வாழுகின்ற இந்த பூமியின் நிலம், நீர், காற்று, ஆகாயம் போன்ற அனைத்தையும் மாசு படுத்தியது. இதைத்.தான் சுற்றுச்சூழல் மாசு என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சுற்றுச்சூழல் மாசுபடுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? சுற்றுச் சூழல் மாசுபடுதலை தவிர்க்க நாம் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதர்கள் வாழும் இடமான நிலத்தை, மனிதர்கள் தங்களின் பல செயல்களினால் மாசுபடுத்துகின்றனர். குறிப்பாக நவீன காலங்களில் மனிதர்கள் உடுத்தும் ஆடைகளை உற்பத்தி செய்யும் சாயப்பட்டறைகள், பல விதமான ரசாயன தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை நில மாசுபாட்டிற்கு பிரதான காரணிகளாக இருக்கின்றன.
மேலும் நவீன விவசாய முறையில் வீரியம் மிகுந்த ரசாயன பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் போன்றவற்றை நிலத்தில் இடுவதால், எளிதில் சரி செய்ய இயலாத வகையிலான நில மாசு ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக நிலத்தில் வாழ்கின்ற உயிர்களுக்கு நன்மை புரிகின்ற நுண்ணுயிர்கள் அழிந்து, உணவு பொருட்கள் உற்பத்தியிலும் சூழலியல், உயிர் சங்கிலியிலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.
பூமியில் புதைக்கப்படுகின்ற பிளாஸ்டிக் கழிவுகளால் மழை நீர் பூமியின் அடி பகுதிக்கு செல்ல முடியாமல் தடுத்து, நிலத்தடி நீர் உயராமல் தடை செய்து விடுகிறது, இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தை மாசுபடுவதால் எதிர்காலங்களில் நிலத்தடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த உலகம் 75 சதவீதம் நீரால் ஆனது என்பது நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருப்போம். 75 சதவீத நீர் என்றாலும் அதில் 97.5 சதவீத நீர் மனிதர்கள் பருகுவதற்கு தகுதியற்ற கடல் நீராக உள்ளது. ஆனால் மனிதர்களும், இன்ன பிற உயிர்களும் உயிர் வாழ அவசியமான உப்புத் தன்மையற்ற நிலத்தடி நீர் என்பது உலகம் முழுவதற்கும் சேர்த்து வெறும் 2.5 சதவீத அளவிற்கே உள்ளது. இதிலிருந்தே நாம் அன்றாட பயன்பாட்டிற்கான நிலத்தடி நீரை எந்த அளவிற்கு நாம் மாசுபடாமல் வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு நமக்கு உண்டாகும்.
எனினும் உலகெங்கிலும் பல்வேறு ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற ரசாயனக் கழிவுகள் கலப்பதன் காரணமாக இந்த நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் மனிதர்களும், இன்ன பிற உயிரினங்களும் அருந்துவதற்கு அருகதையற்றதாக மாறுகிறது. இவற்றை மீறி அந்த மாசடைந்த நீரை குடிக்கும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பலவகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன சமயங்களில் அவை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
மற்ற வகையான மாசுகளை போல் இந்த ஒலி மாசு சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், இன்ன பிற விலங்குகளுக்கும் தீவிரமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் தொழிற்சாலைகளில் இருக்கும் இயந்திரங்கள் எழுப்புகின்ற ஒலி, மக்கள் தொகை பெருக்கத்திற்கு நிகரான வாகன பெருக்கத்தால் அந்த வாகனங்களில் தொடர்ந்து எழுப்பப்படும் ஒலி, மற்றும் மனிதர்கள் ஏற்படுத்தக்கூடிய ஒலி ஆகிய இவை அனைத்தும் ஒலி மாசு என வகைப்படுத்தப்படுகிறது. அதிகளவு ஒலி மாசுக்கு உட்பட்டவர்களுக்கு மன அழுத்தம், அதீத கோபம் போன்ற மன ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுற்றுச்சூழலில் மாசுபாடு வகைகளில் விண்வெளி மாசு என்கிற சொற்பதம் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. விண்வெளி மாசு என்பது யாதெனில் உலகம் முழுவதும் இருக்கின்ற நாடுகள் தங்களின் புவியியல், ராணுவ மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்காக பல ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளனர். இதில் செயல்பாடு நிலை இழந்த பல செயற்கைக்கோள்கள் தற்போது வரை விண்ணில் வட்ட பாதையில் சுழன்று வருகின்றன. இதுவும் ஒருவகை சூழலியல் மாசு தான் என பல சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமிப்பந்தில் இருக்கின்ற ஸ்ட்ராடோஸ்பியர் (stratosphere) எனப்படும் விண் அடுக்கு மண்டலங்களில் இருக்கின்ற ஒருவகையான இயற்கையான வாயு கவசம் தான் ஓசோன் (Ozone) படலம் எனப்படுகிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் நேரடியாக பூமியை தாக்குவதில் இருந்து பூமியையும், அதில் வாழும் உயிர்களையும் காக்கும் தடுப்பு கேடயமாக இந்த ஓசோன் படலம் செயல்படுகிறது. தற்காலத்தில் புவி வெப்பமயம் காரணமாக இந்த ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு அது விரிவடையும் பொழுது சூரியக்கதிர்கள் நேரடியாக பூமியின் மீது விழும் பட்சத்தில் பூமியில் வாழ்கின்ற உயிர்களுக்கு தீங்கு ஏற்படும்.
ஓசோன் படலத்தை பாதிக்கக்கூடிய ஆக குளோரோ புளோரோ கார்பன் (Chloro Fluro Carbon) மற்றும் மீத்தேன் இயற்கை வாயுக்கள் செயல்படுகின்றன. இதில் குளோரோ புளோரோ கார்பன் வாயு குளிர்சாதன பெட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. ஓசோன் படலத்தில் ஓட்டை அதிகம் விரிவடையாமல் இருக்க இந்த வகை வாயுக்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உலகின் அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் என்பது உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளில் மற்றும் கோடிக்கணக்கான வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, இயற்கையான காடுகளின் பரப்பளவு குறைவது போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது,
புவி வெப்பமடையும் பொழுது பூமியில் சூரியனின் கதிர்களால் ஏற்படுகின்ற வெப்பத்தின் அளவும் அதிகரிக்கும். இதனால் விவசாய பயிர்கள் வளர்ச்சியில் பாதகமான மாற்றம் ஏற்பட்டு உணவு பஞ்சம் ஏற்படக்கூடிய நிலையை உண்டாக்கும்.
துருவப் பகுதிகள், இமயமலைத் தொடர்கள் மற்றும் இன்ன பிற பனி மலைத்தொடர்களில் இருக்கின்ற பனிப்பாறைகள் உருகுவதால் உலகெங்கிலும் கடல் மட்டம் அதிகரித்து, ஊருக்குள் கடல் நீர் புகுவது, நல்ல மழைபொழிவு ஏற்படும் பகுதிகளில் தீவிர வறட்சி, வறண்ட பகுதிகளில் திடீர் பெருமழை பொழிதல், அளவுக்கு அதிகமான வெள்ளம், தீவிர புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் புவி வெப்பமடைவதால் அதிகம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதரும் மேற்கொள்ளவேண்டிய முயற்சி என உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி நாம் இப்போது வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழல் தன்மையை பாதுகாக்க கீழ்க்கண்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
நிலம், நீர், காற்று போன்றவற்றை மாசுபடுத்த கூடிய செயல்களை நிறுத்த வேண்டும் அல்லது அவற்றால் வெளியேறும் மாசுபாடு அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.
தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களின் புகை உமிழும் இயந்திர வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, பொது போக்குவரத்து பேருந்து ரயில் சேவைகளை பயன்படுத்துதல் அல்லது மின்சார வாகனங்களை பயன்படுத்துவதாலும் காற்று மாசுபாடு தன்மை குறையும் என அறிவுறுத்துகின்றனர்.
சாயப்பட்டறைகள், ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற ஆபத்தான ரசாயன கலவைகள் குளம், குட்டை, ஏரி, நதி, கடல் போன்றவற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்,
ஒவ்வொருவரும் மரக்கட்டைகள், இயற்கை எரிவாயு பயன்படுத்தி சமைப்பதை காட்டிலும் சூரிய ஒளி அடுப்புகள், மின்சார அடுப்புகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களை பூமியில் புகைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதையும் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யலாம் என அறிவுறுத்துகின்றனர்.
மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களான காகிதம், இயற்கை நார்கள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
ரசாயன உரங்கள், உயிர் கொள்ளிகள் போன்றவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்வதை தவிர்த்து, இயற்கை உரங்கள், இயற்கை உயிரி பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் போன்ற கச்சா எண்ணெய் பொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களை பயன்படுத்தும் விகிதத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். போக்குவரத்து நிறுத்தங்களில் சிக்னல் கிடைக்கும் வரை வாகன இயந்திரங்களை தற்காலிகமாக அணைத்து வைக்க வேண்டும்.
அதிக அளவு மரங்களை நடவேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வாழ்விடங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். மாணவர்களின் கையிலேயே இந்த உலகம் உள்ளது. அப்படியான உலகம் தூய்மையாக இருக்க மாணவர்களின் பங்கு பெரிதும் அவசியம் ஆகிறது. மாணவர்கள் தாங்கள் வசிக்கும் இடம், கல்வி பயிலும் இடம், தங்களது தெரு இப்படி அவர்கள் சம்மந்தப்பட்ட இடங்களை தூய்மையாக வைத்திருப்பது அவசியம் ஆகிறது.
ஒரு மாணவன் தன் சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்திருந்தால் அவனது பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் அவனை பின்பற்றி தங்கள் பங்கிற்கு அவர்களது சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக்கொள்ள பழகுவர். நாளடைவில் நமது நாடே தூய்மையான நாடக மாறும். நாடு தூய்மையாக இருப்பதற்கு அடைப்படை ஒரு மாணவன் தன் சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக்கொள்வது.
இந்த உலகம் என்பது நாம் மட்டுமே வாழ்ந்து முடிந்து விடக்கூடிய இடம் இல்லை என்பதையும், நமக்கு பின்னாலும் பல நூற்றாண்டுகளுக்கு நமது சந்ததிகள் வாழப் போகின்ற இடம் என்கிற எண்ணத்தை நம் மனதிற்குள் வைத்தாலே, நாம் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் செய்யும் காரியங்களை நிச்சயம் குறைத்து கொள்ள முடியும் என சூழலியலில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நாம் ஒவ்வொருவரும் நாம் தற்போது முதல் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுச்சூழலை காப்பதோடு நம்மையும், நமது வருங்கால சந்ததியையும் காப்போம் என உறுதி ஏற்று செயல்படுவோம் என கூறி இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.