- Advertisement -

ஒருவருடைய வாழ்வும் தாழ்வும் அவருடைய மனநிலையை பொருத்து தான் அமைகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி செய்யக்கூடிய அனைத்து விதமான செயல்களும் வெற்றி பெறும் என்ற கூற்று அனைவருக்கும் தெரிந்தது. வெளியில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்குள் வந்தவுடன் ஒரு வித அமைதியோ மன நிம்மதியோ ஏற்பட்டால் தான் அந்த ஆயிரம் பிரச்சனைகளும் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதே வெளியில் பிரச்சினையே இல்லாத சூழ்நிலையில் வீட்டிற்குள் வரும்போது சண்டை சச்சரவுடன் மனைவியோ, குழந்தைகளோ, பெற்றோர்களோ இருந்தார்கள் என்றால் நிம்மதியாக இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு வீட்டின் அமைதியும் நிம்மதியும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மன நிம்மதியையும் அமைதியையும் பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஒரு ஆணுக்கு மன நிம்மதியோ மன அமைதியோ இருந்தால் அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அவரால் வெற்றிபெற முடியும். அதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கும் என்ன செய்யலாம் என்ற ஒரு எண்ணமும் தோன்றும். எந்தவித நோய்களுக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். இதே ஒரு பெண்ணிற்கு மன அமைதி ஏற்பட்டு விட்டால் அந்த குடும்பமே சுபிட்சமாக இருக்கும். எந்தவித சண்டை சச்சரவுகளும் அந்த குடும்பத்தில் ஏற்படாது. அனைவரையும் அனுசரித்து கட்டுக்கோப்பாக அந்த குடும்பத்தை அந்த பெண்ணால் கவனித்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

குழந்தைகளுக்கு மன அமைதி ஏற்பட்டு விட்டால் அவர்கள் தேவையில்லாமல் அடம்பிடிப்பது மற்ற குழந்தைகளுடன் சண்டை போடுவது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். தீய பழக்கங்களுக்கு அடிமையாக மாட்டார்கள். தங்களுடைய எதிர்கால கனவை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் படிப்பிலும் அவர்களுக்கு கவனம் அதிகரிக்கும். இப்படி யாராக இருந்தாலும் ஒருவருக்கு மன அமைதி என்பது ஏற்பட்டு விட்டால் அவருடைய வாழ்க்கை மிகவும் சிறப்பான வாழ்க்கையாக அமையும். அப்படிப்பட்ட மன அமைதியை பெறுவதற்குரிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

மன அமைதியை தரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனுக்குரிய கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. இந்த வழிபாட்டிற்கு மல்லிகைப் பூ, தாழம்பூ குங்குமம், ஜவ்வாது தேவைப்படும். துர்க்கை அம்மன் படம் வேண்டும். அப்படி துர்க்கை அம்மன் படம் இல்லை என்றால் சாதாரண அம்மனின் படத்தை கூட நாம் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உதிரி மல்லிகை பூக்களை வாங்கி அந்த தாம்பாளத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமம் மற்றும் சிறிதளவு ஜவ்வாது சேர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது துர்க்கை அம்மனுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு துர்க்கை அம்மனின் 108 போற்றிகளை கூறி இந்த மல்லிகைப்பூ கலவையால் துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

108 போற்றிகள் தெரியாது என்பவர்கள் துர்க்கை அம்மனின் காயத்ரி மந்திரத்தை கூறலாம் அல்லது “ஓம் துர்க்கை அம்மனை போற்றி” என்னும் எளிமையான மந்திரத்தையும் கூறி அர்ச்சனை செய்யலாம். ஆனால் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்த பிறகு ஊதுபத்தி சாம்பிராணி தூபம் அனைத்தும் காட்டி முடித்துவிட்டு அர்ச்சனை செய்த இந்த மலர்களை சிவப்பு நிற துணியில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தினமும் இந்த துணிக்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். இதே போல் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் இந்த துர்க்கை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு ஒவ்வொரு வாரமும் அர்ச்சனை செய்த மல்லிகை பூக்களை அந்த சிவப்பு நிற துணியிலேயே சேர்த்து கட்டி வைத்து விட வேண்டும். ஒன்பது வார முடிந்த பிறகு இந்த சிவப்பு நிற துணியை அப்படியே பூஜை அடியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மல்லிகை பூவின் சக்தியானது ஒரு வருடம் வரை இருக்கும் என்பதால் தினமும் விளக்கேற்றும் பொழுது இந்த மூட்டைக்கும் சாம்பிராணி தூப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வருடம் கழித்து இந்த மூட்டையை அப்படியே எடுத்துக்கொண்டு போய் கடலிலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும். மறுபடியும் ஒன்பது வாரங்கள் துர்க்கை அம்மனை இதே முறையில் வழிபாடு செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கடனை திருப்பித் தர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த துர்க்கை அம்மன் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் மன நிம்மதி என்பது ஏற்பட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -