
நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கிறது. அந்த தன்மையை பொறுத்துதான் அவர்கள் நமக்கு நன்மைகளையும் தீமைகளையும் வழங்குகிறார்கள். அந்த வகையில் செல்வநிலை உயர்வதற்கும் பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கும் நமக்கு உதவக்கூடிய கிரகமாக திகழக் கூடியவர் தான் சுக்கிரன். அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு நந்தி பகவானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக சுக்கிரனுடைய அதிதேவதியாக திகழக் கூடியவர் மகாலட்சுமி என்றும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதையும் தாண்டி சுக்கிரன் உச்சம் அடையக்கூடிய ராசியாக திகழக்கூடியது ரிஷப ராசி. ரிஷப ராசிக்குரிய குறியீடாக திகழ்வது காளை. இந்த காளையின் மறுவடிவமாக திகழக் கூடியவர் தான் நந்தி பகவான். அதனால் நாம் நந்தி பகவானே வழிபாடு செய்தோம் என்றால் சுக்கிரனின் அருளை பெற முடியும். சுக்கிரனின் அருளை பெறுவதற்கு நந்தி பகவானே எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழக்கூடியது வெள்ளிக்கிழமை. அதனால் வெள்ளிக்கிழமை அன்று நந்தி பகவானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் ஸ்படிக நந்தி அல்லது வெள்ளி நந்தியை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நந்திக்கு வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஹோரையில் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்திற்கு நமக்கு தேவைப்படக்கூடியது நான்கே நான்கு பொருட்கள்.
சுத்தமான தண்ணீர், சிறிதளவு குங்குமப்பூ, சிறிதளவு ஏல அரிசி அதாவது ஏலக்காயின் விதை, சிறிதளவு பச்சை கற்பூரம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து நம் வீட்டில் இருக்கக்கூடிய ஸ்படிக நந்திக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு நந்தியின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த முறையில் நாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நந்தி பகவானை வழிபாடு செய்தோம் என்றால் நந்தி பகவானின் அருளால் செல்வநிலை உயரும் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை வீட்டில் ஸ்படிக நந்தியோ, வெள்ளி நந்தியோ இல்லை என்பவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நந்தி பகவானே வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபாடு செய்யும் போது நந்தி பகவானை நம்முடைய கைகளால் தொடக்கூடாது. அவருக்கு முன்பாக தீபம் தூபம் ஏற்றி வைத்து அவரிடம் உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்தாலே பரமசிவனிடம் கூறியதற்கு சமமாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனுதினமும் நந்தி பகவானை வழிபாடு செய்பவர்களுக்கு நந்தி பகவானின் அருளால் செல்வநிலை உயரும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:நினைத்தது நடக்க தை வெள்ளி தீப வழிபாடு
எப்படி காமதேனுவை தெய்வமாக நாம் வழிபாடு செய்கிறோமோ அதே போல் நந்தி பகவானையும் இந்த முறையில் வழிபாடு செய்ய செல்வநிலை உயரும் பணம் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.