ஒருவருடைய வாழ்க்கையில் பல வகையான துன்பங்கள் இருக்கின்றன. குழந்தையின்மை, திருமண தடை, வேலை கிடைக்காதது, எதிரிகள் தொல்லை என்று நாம் பல துன்பங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு நாம் வழிபட வேண்டிய தெய்வமாக உக்கிர தெய்வங்கள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக உக்கிர தெய்வங்கள் வரிசையில் சரபேஸ்வரரை நாம் வழிபடும் பொழுது அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சரபேஸ்வரர் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக்கூடியவர்தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரருக்கு என்ற ஆலயங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவருக்கு என்று தனியாக ஆலயம் இருப்பது கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய திருபுவனம் என்னும் ஊரில் தான்.
அனைவரும் தங்களின் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் இந்த ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி அவ்வளவு தூரம் செல்ல இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே சரபேஸ்வரரை நினைத்து வழிபாடு செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு சர்வேஸ்வரரின் புகைப்படம் இருப்பவர்கள் அதை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்து அவருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மனதார அவரை நினைத்து வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பவர்கள் இருக்கலாம்.
உபவாசம் இருக்க இயலாதவர்கள் அசைவத்தை தவிர்த்து விட்டு விரதம் இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். அவருக்கு அருகம்புல், வில்வம், செவ்வரளி பூக்கள் இவற்றை அணிவித்து பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷி ராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்
இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ நாளன்று ஆரம்பித்து தொடர்ந்து 11 வாரங்கள் செய்துவர நம் வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட துன்பமாக இருந்தாலும் அந்த துன்பம் விலகி ஓடும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை நாம் வீட்டிலேயும் செய்யலாம் அல்லது சரபேஸ்வரர் வீற்றிருக்கும் ஆலயத்திலும் செய்யலாம்.
இந்த சரபேஸ்வரர் வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். தடைபட்டிருந்த சுப காரியங்கள் விரைவிலேயே நடைபெறும். தொழிலில் இருக்கக்கூடிய நஷ்டங்கள் நீங்கி லாபங்கள் அதிகரிக்கும். நினைத்த வேலை கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க விநாயகர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த சரபேஸ்வரர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.