திருநீறு அணிவதால் என்ன பயன் என்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு பின்னால் உள்ளது மருத்துவ உண்மை. முறைப்படி தயாரான திருநீறு மிகச் சிறந்த கிருமிநாசினி. குறிப்பாக, தலைக்குக் குளித்ததும் நெற்றி நிறையத் திருநீறு பூசுவார்கள். இதனால் சளி பிடிக்காது. நெற்றிப் பகுதியில் உள்ள நீரை, வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை திருநீறுக்கு உண்டு. இதனால் சளி மட்டுமல்லாமல் தலைவலியும் ஏற்படாது.
திருநீறு தயாரிக்கும் முறை:
திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பிறகு இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி, நெருப்பில் புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து, தீ தணிந்த பிறகு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிகவும் மென்மையான திருநீறு கிடைத்துவிடும். இதுதான் உண்மையான திருநீறாகும்.