அது 1854-ம் ஆண்டு. மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் சிறிய கிராமமான ஷீர்டியில், வேப்பமரம் ஒன்றின் அடியில் கடினமானதொரு யோகாசனத்தில் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். பல நாள்கள் எவருடனும் பேசாமல் யோகநிலையில் இருந்த அந்த இளைஞனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலும் துடிப்பும் அந்தக் கிராமத்தவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது.
புனிதமான அந்த இடத்தைப் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று இளைஞன் கூற, அதை ஏற்றுக்கொண்டு கிராமத்து மக்களும் அந்த இடத்தை மனதார வணங்கினார்கள். அதன் பிறகு அங்கிருந்து அந்த இளைஞன் காணாமல் போனான்!
வருடங்கள் ஓடின. ஒளரங்காபாத் மாவட்டத்தின் தூப் நகரில் வசித்த சாந்த்பாடீல் என்ற அன்பர், தனது ஊரிலிருந்து ஒளரங்காபாத் செல்லும் வழியில் தனது குதிரையைத் தொலைத்துவிட்டார். இரண்டு மாதங்களாகத் தேடியும் குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஒருநாள் குதிரையைத் தேடியலைந்த சாந்த்பாடீல் களைப்பாறுவதற்காக அங்கிருந்த மரத்தடிக்குச் சென்றார். அங்கே, கஃப்னி எனும் நீண்ட அங்கி அணிந்துகொண்டு, கையில் ஸட்கா எனும் குறுந்தடியுடனும், ஹூக்காவுடனும் திகழ்ந்த விசித்திர மனிதர் ஒருவரைக் கண்டார். அந்த மனிதர், அருகிலிருந்த சோலையைச் சுட்டிக்காட்டி அங்கு போய் குதிரையைத் தேடும்படி சாந்த்பாடீலைப் பணித்தார்.
சில நாள்கள் கழித்து சாந்த்பாடீலின் உறவுக்காரப் பையனுக்குக் கல்யாணம் வந்தது. மணப்பெண் ஷீர்டியைச் சேர்ந்தவள். ஆகவே, அனைவரும் ஷீர்டிக்குப் பயணமானார்கள். அவர்களோடு விசித்திர மனிதரும் சேர்ந்துகொண்டார்.
ஏற்கெனவே தான் யோகாசனத்தில் இருந்த வேப்பமரத்தடிக்கு வந்த சாயி, அருகிலிருந்த மசூதியைத் தான் தங்குவதற்குத் தேர்ந்தெடுத்தார். ‘அன்னை இருக்கும் இடம்’ எனும் பொருள்படும்படி அந்த மசூதிக்குத் ‘துவாரகாமாயி’ என்று திருப்பெயரும் சூட்டினார். அன்றிலிருந்து இன்று வரையிலும் தன்னைத் தேடிவரும் பிள்ளைகளுக்கு அன்னையின் இல்லமாகவே திகழ்ந்து ஸ்ரீசாயியின் திருவருளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது துவாரகாமாயி!
சாய் பாபாவின் அற்புதங்கள் மற்றும் சாய் பாபா கதைகள் படிக்க தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.