- Advertisement -
- Advertisement -

கனக துர்கா தேவி, ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள இந்திரகில பர்வதத்தில் அருள்புரியும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம். இந்தியாவின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. மகிஷாசுரனை அழித்த பிறகு, துர்கா தேவி இத்தலத்தில் தங்க மழை பொழியச் செய்ததால், “கனக துர்கா” (கனகம் என்றால் தங்கம்) என்ற பெயர் பெற்றாள். வீட்டில் தங்கம் சேர்வதற்கு இந்த கனகதுர்க்கை அம்மனை வழிபடும் முறை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

கனக துர்க்கை அம்மனை, கோடி சூரியன்களின் ஒளியுடன் ஜொலிக்கும் தங்க நிற தேவியாக தேவர்கள் துதித்தனர். கீலா என்ற அசுரன் துர்கா தேவியின் அருளை வேண்டி தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த தேவி, அவனுக்குக் காட்சி கொடுத்து, “நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில், அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் வாசம் செய்வேன்” என்று வரம் அருளினாள். அதன்படி, கீலா மலையாக மாறினான். மகிஷாசுரனை வதம் செய்தபின், அன்னை துர்கா கீலா மலை மீது அஷ்டகரங்களுடன், மகிஷாசுரமர்த்தினியாகக் காட்சி தந்தாள்.

- Advertisement -

ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து, அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகும். தங்கம் வீட்டில் சேர்வதற்கு, கனக துர்கையை வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. கனக துர்கா தேவி, செல்வம் மற்றும் சுபிட்சத்தை அள்ளித் தருபவளாகப் போற்றப்படுகிறாள். தங்கம் வீட்டில் சேரவும், பொருளாதார வளம் பெருகவும் கனக துர்கையை வழிபடும் முறைகள் பற்றி பார்ப்போம்.

செவ்வாய்க்கிழமை ராகு காலம் துர்கா தேவிக்கு மிகவும் உகந்த நேரம். இந்த நேரத்தில் கனக துர்கையை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக அறுத்து, அதன் சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைத் திருப்பிப் போட்டு, அதில் நெய் ஊற்றி, சிறிய திரியிட்டு தீபம் ஏற்றி கனக துர்கையை வழிபடலாம். இது தடைகளை நீக்கி, செல்வ வரவை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. கனக துர்கா தேவிக்கு தங்க நிற அரளிப் பூக்களால் மாலை சாற்றி வழிபடுவது, வீட்டில் தங்கம் சேர மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

கனக துர்கா மந்திரம்:
“ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்”

இந்த மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் உச்சரிப்பது, அன்னையின் அருளைப் பெற்று செல்வ வளத்தை மேம்படுத்தும். நவராத்திரி காலத்தில் கனக துர்கா கோவிலுக்குச் சென்று வழிபடுவது அல்லது வீட்டிலேயே நவராத்திரி பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. இந்த நாட்களில் தேவி பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவதால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ரூபத்தில் வழிபடுவது சகல ஐஸ்வர்யங்களையும் தரும்.

இதையும் படிக்கலாமே:
அம்மனை வரவேற்கும் ஆடி தீபம்

அம்மனுக்கு அபிஷேகம் செய்து, தூப தீபம் காட்டி, பழங்கள் மற்றும் நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம். தங்கம், வெள்ளி, தாமிரம், கருங்கல், மரம் அல்லது மண்பொருட்களால் ஆன கனக துர்கா சிலையையோ அல்லது படத்தையோ வைத்து வழிபடலாம். மனதார பக்தியுடன் கனக துர்கையை வழிபடுவதன் மூலம், தடைகள் நீங்கி, செல்வம் பெருகி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும். அன்னை கனக துர்காவை வணங்கினால், அவளது அருளால் வீட்டில் பொன்மழையே பொழியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

- Advertisement -