- Advertisement -
சமையல் குறிப்புகள்

வேண்டும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் காரசாரமான, கமகம வாசமுள்ள ‘திருநெல்வேலி இட்லி பொடி’ எப்படி செய்யறது? இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

இந்த இட்லி பொடியை செய்து வைத்துவிட்டால் போதும். எத்தனை சட்டி, இட்லி அவித்து கொட்டினாலும் சாப்பிடுபவர்களுக்குப் பத்தவே பத்தாது. வேண்டும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த திருநெல்வேலி இட்லி பொடியை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கொஞ்சம் வித்தியாசமான முறையில், கொஞ்சம் அதிகப்படியான வாசத்தோடு காரசாரமாக செய்யக்கூடிய இட்லி பொடி இது. மிஸ் பண்ணாம ஃபுல்லா படிச்சு தெரிஞ்சுக்கோங்க. இந்தப் பொடி செய்ய 10 லிருந்து 15 நிமிடங்கள் போதும் என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பொடி செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/2 கப் (100 கிராம்), எள்ளு – 1/4 கப் (50 கிராம்), மிளகாய் காரத்திற்கு ஏற்ப 8 லிருந்து 10, உப்பு – 1/2 ஸ்பூன் அளவு, பூண்டு – 6 பல் தோலுரித்து, பெருங்காயம் – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

Step 1:
முதலில் கனமான கடாயை அடுப்பில் வைத்து, சூடு செய்து விட்டு, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தோல் உரிக்காத கருப்பு உளுந்து இருந்தால் ஆரோக்கியத்திற்கு மேலும் நல்லது. உளுத்தம் பருப்பின் பச்சை வாடை முழுமையாக நீங்கினால் தான் பொடி சுவையாக இருக்கும். வறுத்த உளுத்தம்பருப்பை தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்து விடுங்கள்.

Step 2:
இரண்டாவதாக ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி தயாராக உரித்து வைத்திருக்கும் பூண்டை லேசாக நசுக்கி, அந்த எண்ணெயில் போட்டு பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எடுக்க வேண்டும். இதை தனியாக ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 3:
மூன்றாவதாக அதே கடாயில் வர மிளகாயையும், உப்பையும் போட்டு பொன்னிறம் வரும் அளவிற்கு சிவக்க வைத்து எடுத்து உளுத்தம்பருப்பு வைத்திருக்கும் தட்டிலேயே வைத்துக் கொள்ளலாம்.

Step 4:
நான்காவதாக தயாராக எடுத்து வைத்திருக்கும் எள்ளை கடாயில் கொட்டி, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு எள்ளு பொரிந்து சிவக்கும் பக்குவத்தில் இதையும் எடுத்து உளுத்தம்பருப்பு தட்டிலேயே ஒன்றாகக் கொட்டிக் கொள்ளலாம். எள்ளு கருதிவிடக்கூடாது. பொடியின் சுவை மாறிவிடும்.

- Advertisement -

Step 5:
இறுதியாக அடுப்பை அணைத்துவிடுங்கள் கட்டி பெருங்காயம் ஆக இருந்தால், சிறிய பெருங்காய துண்டை போட்டு பொரிய விட்டு, பொடியுடன் சேர்த்து கொள்ளலாம். பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன் பெருங்காயத்தை நேரடியாகவே பொடியில் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது இந்த பொருட்கள் எல்லாம் அப்படியே ஆரட்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, உளுந்து, வரமிளகாய், பெருங்காயம், உப்பு, எள்ளு இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். மிக்ஸியை முழுமையாக ஓட விடவேண்டாம். பல்ஸ்(pulse) பட்டனில் வைத்து இரண்டு, மூன்று முறை ஓட்டினால் கூட நறநற வென பொடி தயாராகி இருக்கும்.

Step 6:
இறுதியாக தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்திருக்கும் பூண்டை போட்டு ஒரு pulse பட்டனை ஓட்டி எடுத்தால் போதும் திருநெல்வேலி இட்லி பொடி கமகம வாசத்தோடு தயாராகியிருக்கும். இதை நன்றாக ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வெளியே வைத்தால் 10 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

Step 7:
இந்தப் பொடியை வைத்து சுட சுட ஒரு பொடி இட்லியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம். ஒரு அகலமான கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு போட்டு பொரியவிட்டு, சூடு ஆறிய இட்லி துண்டுகளை கடாயில் சேர்த்து, ஒரு நிமிடம் வரை சூடுபடுத்தி, மேலே 2 டேபிள்ஸ்பூன் அளவு அல்லது உங்களுக்கு தேவைப்படும் அளவு இந்த இட்லி பொடியை தூவி, ஒரு இணுக்கு கருவேப்பிலையை தூவி, லேசாக சூடு செய்தால் கமகம பொடி இட்லி தயார். தேவைப்பட்டால் 1/2 ஸ்பூன் நெய்யையும் இந்த இட்லியோடு சேர்த்து பரிமாறலாம். இந்தப் பொடி இட்லிக்கு, சிறிய இட்லிகளை பயன்படுத்தலாம். இல்லை என்றால் ஆறிய இட்லியை துண்டு துண்டாக வெட்டி பயன்படுத்திக்கொள்ளுங்கள் கூடுதலாகும்.

இதையும் படிக்கலாமே
எவர்சில்வர் பாத்திரத்தில் பால் சுண்டி தீய்ந்து போய் விட்டதா? 5 நிமிஷத்துல கை கூட வைக்காமல் சுத்தம் செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -