காலத்தை சுழற்றிக் கொண்டிருக்கும் காலபைரவருக்கு ஈசனுடைய அம்சங்கள் உள்ளதாக ஆன்மீகம் கூறுகிறது. பிரம்மதேவரின் ஆணவத்தை அடக்க அவதாரம் எடுத்த இந்த காலபைரவருக்கு முக்காலமும் உணரும் சக்தி உண்டு. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை தன் கைவசம் கொண்டுள்ள இந்த கால பைரவரை, கலியுகத்தில் வணங்கி வருபவர்களுக்கு எத்தகைய இன்னல்களும் நெருங்குவதில்லை. அத்தகு சக்திகள் பெற்றுள்ள இந்த கால பைரவருக்கு எந்த மாலை சாற்றி? தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், கடன் எல்லாம் தீர்ந்து போகும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் காணவிருக்கிறோம்.
கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக இருக்கும் இந்த கால பைரவர் ஒற்றை நாயை தன் வாகனமாகக் கொண்டு இருக்கிறார். காவல் காக்கும் கால பைரவருக்கு, காவல் காக்கும் நாய் வாகனமாக அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. பிரசித்தி பெற்ற கோவில்கள் நடை சாத்திய பின்பு சாவியை காலபைரவருக்கு முன்பு வைத்து தான் எடுத்து செல்வார்கள்.
இவருக்கு மிளகு தீபம் ஏற்றி, செவ்வரளி மலர் சாற்றி, பைரவாஷ்டகம் வாசிக்க நொடியில் வந்த துன்பம் எல்லாம் நீங்கும் என்பது நியதி. பைரவருக்கு உகந்தது அஷ்டமி திதி ஆகும். அதிலும் தேய்பிறை அஷ்டமி ரொம்பவே விசேஷத்திற்கு உரியது. தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் எத்தகைய தடைகள் இருந்தாலும், தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.
கடன்கள் தீருவதற்கு பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபடுவது சிறப்பம்சமாகும். முந்திரி பருப்பு மாலை பைரவர் திருமேனியில் படும் பொழுது உங்களுடைய கடன்கள் கரைய ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் அவருக்கு மிகவும் பிடித்தமான செவ்வரளி மலர் சாற்றி வழிபடுங்கள். ஒன்று அல்லது இரண்டு என்கிற எண்ணிக்கையில் அகல் விளக்குகளை புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற துணியில் கொஞ்சம் மிளகுகளைப் போட்டு இறுக்கமாக கட்டி அதை நல்லெண்ணெயில் முக்கி வைத்து விடுங்கள்.
சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுவது போல, கால பைரவரருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் அவர்களுக்கு எல்லா கடனும் விரைவாக அடைந்து விடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பைரவருக்கு அவதாரங்கள் நிறையவே உண்டு. அதில் குறிப்பிட்ட சில அவதாரங்கள் மட்டும் இப்போது வழிபாட்டில் உள்ளது. காசியை ஆண்டு கொண்டிருக்கும் இந்த கால பைரவருக்கு மூலவரை காட்டிலும் அதிக மரியாதைகள் உண்டு. முதல் ஆராதனை காலபைரவருக்கு காண்பித்த பின்பே காசி விஸ்வநாதருக்கு காண்பிக்கப்படுகிறது.
ஆணவம், அகங்காரம், மமதை, கர்வம் பிடித்தவர்களுக்கு காலபைரவர் சரியான பாடம் புகட்டுவார். எனவே பகைவர்கள் தொல்லை நீங்கவும், கால பைரவரை வழிபடுவது உண்டு. ஐந்து தலைகள் கொண்ட பிரம்ம தேவர் ஆணவத்தில் இருந்த பொழுது ஒரு தலையைக் கொய்து நான்முகன் ஆக்கிய பெருமை இவருக்கே உண்டு. புதிதாக வீடு வாங்குபவர்கள், வாகனம், பீரோ போன்ற பொருட்களை வாங்குபவர்கள் பைரவர் காலடியில் சாவி கொத்தை வைத்து பூஜை செய்து பின்னர் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகு காலபைரவர் வழிபாடு கடன் தீர்ந்து கோடீஸ்வர யோகத்தையும் அருளும்.