- Advertisement -

வெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே இருக்காது!

பணத்திற்கு அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி தாயார். அவரை வேண்டி வழிபட்டு வருவதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய சகல சம்பத்துக்கள் கிடைக்கப் பெறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வரத்தை தரும் சக்தி உண்டு. அதில் செல்வத்தையும், பணத்தையும் வாரி வழங்கக்கூடிய மகாலட்சுமியின் மனம் குளிர நாம் வீட்டில் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நாம் பூஜை அறையில் பூஜை செய்ய வேண்டும். மற்ற கிழமைகளை காட்டிலும் வெள்ளிக்கிழமைக்கு மகத்துவம் இருப்பதற்கு மகாலட்சுமி தாயார் காரணமாவார். வீட்டில் இருக்கும் இருள் நீங்கி ஒளி பெற வெள்ளிக்கிழமையில் கட்டாயம் தீப ஒளியை வீட்டில் ஏற்ற வேண்டும் என்பது நியதி. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அம்பாளுக்கு உகந்ததாக இருக்கின்றது. இந்நாளில் வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் துஷ்ட சக்திகள் நீங்கி, செல்வ வளம் பெருகும் என்பது நம்முடைய நம்பிக்கை.

- Advertisement -

அப்படி வெள்ளிக்கிழமையில் பூஜை செய்யும் பொழுது மஹாலக்ஷ்மி தாயாருக்கு இந்த கலசத்தை செய்து வைத்துவிட்டு பூஜைகள் துவங்குவது சகல செல்வங்களையும் நமக்கு கொடுக்கக் கூடிய பரிகாரமாக அமையும். அதை முறையாக எப்படி செய்வது? என்பதை பார்ப்போம். ஒரு செம்பு அல்லது பித்தளை கலசம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரம் செய்ய எவர்சில்வர் கலசத்தை பயன்படுத்த வேண்டாம். அதை நன்கு விலக்கி வைத்து மஞ்சள், சந்தனம், குங்குமம் நாற்புறமும் இட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அந்த கலசத்தின் வாய் பகுதியில் மல்லிகை அல்லது முல்லை மலரை கொண்டு அலங்கரித்து சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலசத்திற்கு சுத்தமான தண்ணீர் ஊற்றி வையுங்கள். கலசத்தின் கழுத்து பகுதி வரை தண்ணீர் முழுவதுமாக ஊற்றி இருக்க வேண்டும். அதில் சிறிதளவு பன்னீர், கோமியம், கங்கா ஜலம் இவற்றில் எது உங்களிடம் இருக்கிறதோ அதனை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் குங்குமமும் ஒரு துளி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நான்கைந்து துளசி இலைகளை போட்டு அதில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்

- Advertisement -

இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சிறிதளவு சேர்த்தாலே போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. பின்னர் ஏலக்காயை ஒன்றை தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு கிராம்பு, ஒரு சிறு பட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்களோ அத்தனை நாணயங்களை உள்ளே போட வேண்டும். இப்போது நாம் சேர்த்து உள்ள அத்தனை பொருட்களும் தெய்வீக அம்சம் உடையது ஆகும். செல்வத்தை ஈர்த்து தரக்கூடிய சக்தி படைத்தது. இதனால் மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து அந்த கலசத்தில் ஆவாகனம் ஆகிவிடுவாள் என்பது ஐதீகம்.

பின்னர் அன்றாடம் வழக்கம் போல நீங்கள் எப்படி பூஜை செய்வீர்களோ! அப்படி பூஜை செய்ய வேண்டும். பூஜையில் ஏற்றப்படும் விளக்கில் நெய் ஊற்றி ஏற்றுவது மிகவும் முக்கியம். நெய் ஊற்றி ஏற்ற முடியாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். அடுத்த வாரம் வரை அப்படியே அந்த கலசத்தை வைத்திருந்து மறு வியாழன் கிழமையில் கலசத்தில் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். உள்ளே இருக்கும் நாணயங்களை வெளியில் எடுத்து அதனை கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். மீண்டும் வெள்ளி அன்று இதே போல செய்து வர வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இவ்வாறு செய்து வந்தால் வீட்டில் செல்வ நிலையானது உயர்வதை நீங்களே பார்க்கலாம். உங்கள் கையில் விரைவில் பணப்புழக்கமும் அதிகரிப்பதை பார்ப்பீர்கள்.

- Advertisement -