வீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம் வைத்தால்! ஐஸ்வரியம் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்!

sivan-6
- Advertisement -

சிவனுடைய பக்தர்கள் வீட்டில் கட்டாயம் லிங்கம் அல்லது சிவன் படம் வைத்திருப்பார்கள். சிவபெருமான் படத்தை வீட்டில் தனியாக வைத்திருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. சிவனும், பார்வதியும் தம்பதி சமேதராக இருக்கும் படத்தை தாராளமாக யார் வேண்டுமானாலும் வீட்டில் வைத்து வழிபடலாம். இதனால் குடும்பத்திற்குள் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படாது என்பது சாஸ்திர நியதி. கணவன் மனைவி ஒற்றுமை, செல்வ வளம், தொழில் விருத்தி போன்றவை ஏற்பட சிவபெருமானை வழிபடலாம். இப்படி பக்தர்கள் துயர் தீர்க்கும் எம்பெருமான் ஈசனுக்கு எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sivan-2

திங்கட்கிழமை:
திங்கள் கிழமை என்பது சிவபெருமானுக்கு உகந்த கிழமையாகும். இதனை சோமவாரம் என்றும் கூறுவர். சோமவார விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோமவார விரதத்தை சிவபெருமானுக்கு கடைப்பிடிப்பது வழக்கம். அப்படி திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுபவர்கள் பால் சாதம் அல்லது தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைப்பது நல்லது. இதன் மூலம் வருமானம் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க் கிழமை தோறும் சிவபெருமானை வழிபட்டு, விரதம் இருப்பவர்களுக்கு ஞானம் உண்டாகும் என்பது விதியாகும். சிறந்த அறிவாற்றல் பெற செவ்வாய்க் கிழமையில் ஈசனை வணங்கலாம். அப்படி அவருக்கு செவ்வாய்க் கிழமையில் வழிபாடுகள் செய்யும் பொழுது நைவேத்தியம் படைக்க வெண் பொங்கலை தயார் செய்வது மிக மிக நல்லது. கல்வி கற்கும் மாணவர்கள், கலைகளை கற்க விரும்பும் அனைவரும் ஈசனை செவ்வாய்க் கிழமையில் வழிபடலாம்.

ven-pongal

புதன்கிழமை:
புதன் கிழமை அன்று சிவபெருமானை வழிபடுபவர்கள் சுபகாரியத் தடைகள் நீங்கப் பெறுவார்கள். ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பது ஜோதிட பழமொழி. அத்தகைய சக்தி வாய்ந்த புதன் கிழமையில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட வாழ்வில் சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். புதன் கிழமையில் வழிபடுபவர்கள் செய்ய வேண்டிய நைவேத்தியம் கதம்ப சாதம் ஆகும். அதாவது அனைத்து காய்கறிகளும் சேர்த்து செய்த சாதம் கதம்ப சாதம் ஆகும். இவ்வாறு செய்ய சுபகாரிய முயற்சிகள் தடையில்லாமல் வெற்றி பெறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.

- Advertisement -

வியாழன் கிழமை:
குருவின் ஆதிக்கம் உள்ள வியாழன் கிழமை மிகவும் விசேஷமானது ஆகும். சுகபோக வாழ்வு பெறவும், சொத்து சுகங்களை அனுபவிக்கவும் வியாழன் கிழமையில் ஈசனை வழிபட வேண்டும். ஈசனை அடைக்கலம் தேடி செல்வோர் துன்பக் கடலில் மூழ்குவது இல்லை. எனவே அவரின் அருள் பெற வியாழன் கிழமை அன்று பூஜை செய்பவர்கள் சித்ரான்னம் படைத்து வழிபடலாம். இதனால் வாழ்வில் சகல, சம்பத்துகளும் பெறுவதாக ஐதீகம் உள்ளது.

coconut-rice

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக் கிழமையில் சிவபெருமான் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது ஆகும். சிவபெருமானையும், அம்பாளையும் சேர்த்து வழிபட குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். கணவன்-மனைவிக்குள் திடீர் பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும். கணவன்-மனைவிக்குள் பிரிவு உண்டாகும் பொழுது வெள்ளிக்கிழமையில் சிவபெருமானை நோக்கி விரதமிருந்து, வழிபாடுகள் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் சிவபெருமான் வழிபாடு செய்யும் பொழுது நிவேதனமாக பால் பாயாசம் வைப்பது முறையாகும்.

paal-payasam

சனிக்கிழமை:
சனிக் கிழமைகளில் சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நியதி. சனிக்கிழமையில் பைரவர் வழிபாடு, சிவபெருமானுக்கு வழிபாடு, மஹாவிஷ்ணு வழிபாடு, சனி பகவான் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது. நவகிரக தோஷங்கள் ஆட்கொண்டு இருக்கும் போது, அவைகள் விலக முற்றும் அறிந்த ஈசனை வழிபட வேண்டும். அப்படி சனிக்கிழமையில் சிவ வழிபாடு செய்பவர்கள் புளியோதரை வைத்து வழிபட வேண்டும் என்பது முறையாகும். விரதத்தை முடித்தபின் புளியோதரை தானம் செய்யலாம்.

puliyotharai 3

ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக் கிழமையில் சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நாளில் சர்க்கரை பொங்கல் செய்வது மிகுந்த பலனை தரக்கூடியது ஆகும். ஞாயிறு அன்று சிவ வழிபாடு செய்தபின் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது எல்லா வளங்களையும் கிடைக்க செய்யும். பதினாறு பேறுகளையும் பெற்று புகழின் உச்சிக்கு செல்லலாம். ஒவ்வொரு கிழமையிலும் சிவபெருமானுக்கு வழிபாடுகள் செய்யும் பொழுது 108 ருத்ர காயத்ரி மந்திரம் உச்சரிக்க எண்ணிய எண்ணம் எல்லாம் அப்படியே ஈடேறும் என்பது நம்பிக்கை.

- Advertisement -