இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய இரவு உணவாக சப்பாத்தியை தான் சாப்பிடுகிறார்கள். அதிலும் வயதானவர்களுக்கு எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்தி செய்து தரும் சூழ்நிலையும் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டவர்கள் சப்பாத்தியில் எண்ணெய் தேய்க்காமல் வெறும் சப்பாத்தியாக செய்து சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் சரி சிறு குழந்தைகளும் சரி சப்பாத்தியை வேகவைத்து சப்பாத்தி ரோலாக செய்து தருவதன் மூலம் எந்தவித சலிப்பும் இல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.
எப்பொழுதும் சாப்பிடுவதை விட அதிக அளவு சாப்பிடுவார்கள். மேலும் இப்படி நாம் சப்பாத்தி செய்து தருவதன் மூலம் தொட்டுக் கொள்வதற்கு என்று தனியாக வேறு எதுவும் தேட வேண்டிய அவசியமே இல்லை. இந்த வித்தியாசமான ஸ்ட்ரீம் சப்பாத்தி மசாலா ரோல்லை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – ஒரு கப்
- வெங்காயம் – ஒன்று
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
- துருவிய கேரட் – ஒன்று
- புதினா இலை – சிறிது
- தக்காளி – ஒன்று
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்,
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
- எள் – ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – ஒன்று
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் சப்பாத்தி பிணைவதற்கு கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிணைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் லேசாக எண்ணையை தடவி மூடி வைத்து விடுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், துருவிய கேரட், புதினா இலைகள் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயமும் கேரட்டும் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக தக்காளி குழையும் வரை வேக வைத்து மசாலாவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரே அளவாக சப்பாத்தி உருண்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு சப்பாத்தியை தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு சப்பாத்தியை வைத்து அதற்கு மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து பரப்ப வேண்டும். அதற்கு மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து அந்த சப்பாத்திக்கு மேல் மறுபடியும் மசாலாவை பரப்பி அதற்கு மேல் ஒரு சப்பாத்தி என்று நமக்கு எத்தனை அடுக்குகள் வேண்டுமோ அத்தனை சப்பாத்திகளை ஒன்றின் மேல் ஒன்றாக மசாலாவை வைக்க வேண்டும்.
பிறகு இதை அப்படியே மூன்றாக மடித்து இட்லி சட்டிக்குள் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து இந்த சப்பாத்தியை எடுத்து நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் அந்த சப்பாத்தியை நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் எள், கருவேப்பிலையை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக பொரிந்ததும் நாம் நறுக்கி வைத்திருக்கும் வேகவைத்த சப்பாத்தியை அதில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பிரட்டி விட்டு எடுக்க வேண்டும். மிகவும் சுவையான ஸ்ட்ரீம் சப்பாத்தி மசாலா ரோல் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: சட்டுனு செய்யலாம் ஈவினிங் ஸ்நாக்ஸ்
ஒருமுறை இப்படி சப்பாத்தி செய்து கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு சாப்பிட்டு காலி செய்து விடுவார்கள்.