நம் அனைவருக்கும் வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதேபோல் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். இதற்காக பலரும் பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது, மூச்சுப் பயிற்சி செய்வது, மேலும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது, முகத்திற்கு உடம்பிற்கும் பலவிதமான பேக்குகளை போட்டு இளமையை தக்க வைத்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை செய்வார்கள். அவற்றுள் மிகவும் எளிமையாக பின்பற்றக்கூடிய சில வழிமுறைகளைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
இளமையும் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. யாரெல்லாம் ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவருமே இளமையாக தான் இருப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே உடல் ஆரோக்கியம் இல்லாமல் முதுமை தோற்றத்தை அடையக்கூடிய அவல நிலை என்பது ஏற்பட்டு இருக்கிறது. இந்த வழிமுறைகளை மட்டும் நாம் தொடர்ச்சியாக பின்பற்றும் பொழுது நம்முடைய மனமும் உடலும் சருமமும் தலைமுடியும் என்றும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
இதற்கு முதலில் நாம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. இதை உணவு என்று கூட கூற வேண்டாம். பானம் என்று கூறலாம். இதற்கு நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் வேண்டும். இரண்டு கேரட்டை எடுத்து பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு ஸ்பூன் தேன், அடுத்ததாக அரை ஸ்பூன் சீரகம் இவை மூன்றையும் போட்டு நன்றாக அரைத்து கேரட் ஜூஸாக நாம் தினமும் குடிக்க வேண்டும். இப்படி நாம் குடிப்பதன் மூலம் நம் கண்களும் சருமமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகம் என்பது அகத்தை சீர் செய்யக்கூடிய ஒன்று என்பதால் நம் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படும்.
அடுத்ததாக சருமத்தை பாதுகாப்பதற்காக ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று கோரைக்கிழங்கு பொடி மற்றொன்று மகிழம் பூ பொடி. இரண்டையும் 100 கிராம் என்ற அளவு வாங்கி சரிசமமாக கலந்து கொள்ளுங்கள். கலந்த இந்த பொடியை பன்னீரில் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் விட்டுவிட்டு பிறகு கழுவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை நாம் உபயோகப்படுத்தும் பொழுது சோப்புகளையோ அல்லது ஃபேஸ் வாஷையோ பயன்படுத்த கூடாது. வெறும் தண்ணீரை வைத்து தான் கழுவ வேண்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் இப்படி செய்துவிட்டு நாம் உறங்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் இதை செய்தால் போதும். நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி முகச்சுருக்கம் இன்றி அழகாகவும் இளமையாகவும் இருப்போம்.
இதையும் படிக்கலாமே:இயற்கையான பொலிவைத் தரும் பீட்ரூட்
என்னதான் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஃபேஸ்பேக் அல்லது ஜூஸையோ குடித்தால் மட்டும் பத்தாது நம்முடைய மனம் சுத்தமாகவும் தெளிவாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய இளமையும் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.