நம்முடைய வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை என்று கூறலாம். இந்த கடன் பிரச்சினை வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது வந்து கொண்டே இருக்கும், எங்கு சென்றாலும் நிம்மதி என்பதே இருக்காது. எப்படியாவது கடனை திருப்பித் தர வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்து தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறோம், கடனிலிருந்து ஒரு சிறு அளவு கூட குறையவில்லை மலை போல் பெருகிக்கொண்டே செல்கிறது என்று நினைப்பவர்கள் நரசிம்மரை வழிபாடு செய்ய அவர் கடன் பிரச்சினை அனைத்தையும் நீக்கி நமக்கு நல்வாழ்க்கையை அருள்வார். அப்படிப்பட்ட நரசிம்மரின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நரசிம்மர் மந்திரம்
நரசிம்மரை உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்று கூறுவது உண்டு. பலரும் நரசிம்மரின் புகைப்படத்தை வீட்டில் வைக்க மாட்டார்கள். ஆனால் லக்ஷ்மி நரசிம்மரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். லட்சுமி நரசிம்மரை வீட்டில் வைத்து நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்வதோடு மகாலட்சுமியின் அம்சமும் நம் வீட்டை தேடி வரும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்ததாக பலரும் நினைப்பது சுவாதி நட்சத்திரம் தான். இருப்பினும் சனிக்கிழமை மற்றும் புதன் கிழமையில் நரசிம்மரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
இந்த இரண்டு நாட்களில் மட்டும் நாம் நரசிம்மருக்குரிய பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை கூறினால் போதும் நரசிம்மரின் அருளால் நம் வாழ்க்கையை கலங்கடிக்கும் கடன் என்ற பிரச்சனை நம்மை விட்டு நீங்கும். இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கூறலாம். காலையில் கூற இயலாது என்பவர்கள் மாலை 4:30 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் கூறலாம். நரசிம்மர் அவதரித்த நேரமாக மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி திகழ்கிறது என்பதால் இந்த நேரம் நரசிம்மரை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது. இயன்றவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் நரசிம்மரின் படம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தங்களால் இயன்றால் பானகத்தை தயார் செய்து வைத்து இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இயலாதவர்கள் தண்ணீரில் இரண்டு துளசி இலையை போட்டு கூட வைக்கலாம். நரசிம்மரின் படம் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்தும் இந்த மந்திர உச்சாடலை செய்யலாம். தரையில் அமர்ந்து செய்பவர்கள் ஒரு விரிப்பை விரித்து அதில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
இந்த மந்திரத்தை கூறும்போது அசைவம் சாப்பிட்டிருக்க கூடாது. மிகவும் சுத்தமாக இருக்கும் சமயத்தில் மட்டும்தான் இந்த மந்திர உச்சாடலை மேற்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை 108 முறை கூறுவதற்கு கற்கண்டு, பருப்பு வகைகள் என்று ஏதாவது ஒன்றை 108 என்ற எண்ணிக்கைக்காக எடுத்திருந்தோம் என்றால் மந்திரம் கூறி முடித்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அதை எடுத்து எறும்புகளுக்கோ அல்லது பறவைகளுக்கோ போட்டுவிட வேண்டும்.
மந்திரம்
“ஸ்ரீ நரசிம்மம் மஹாவீரம் ருணமுக்தயே நமோ நமஹ”
இதையும் படிக்கலாமே: பண வசியத்தை ஏற்படுத்தும் சந்திர மந்திரம்
முழு நம்பிக்கையோடு நரசிம்மரை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.