உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய கால பைரவரை நாம் முழுமனதோடு சரணாகதி அடைந்து வேண்டினோம் என்றால் அவரின் அருளால் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கால பைரவருக்கு உகந்த அஷ்டமி திதி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வளர்பிறையில் வரக்கூடிய அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும் என்றும், தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி திதியில் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி. இன்றைய நாளில் ராகு காலத்தில் நாம் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை அஷ்டமி ராகுகால வழிபாடு
காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது சனீஸ்வர பகவான், ராகு பகவான், கேது பகவான் போன்றவர்களின் பாதிப்பிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும். இவர்கள் மூவரும் தான் நமக்கு ஏற்படக்கூடிய காரிய தடைகளுக்கு காரணமாக திகழ்கிறார்கள். மேலும் நம்முடைய வாழ்க்கையில் அதிகப்படியான கஷ்டங்களை தரக்கூடியவர்களாகவும், இவர்கள் தான் திகழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்கு ராகு காலத்தில் கால பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
இன்றைய தினம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ராகு காலம் 4:30 மணியிலிருந்து 6 மணி. இந்த நேரத்தில் நாம் அருகில் எந்த ஆலயத்தில் காலபைரவர் வீற்றிருக்கிறாரோ அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். முடிந்த அளவிற்கு ராஜகோபுரம் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கால பைரவரை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாக இருக்கும். இன்றைய நாளில் அசைவத்தை தவிர்த்து விடுவது நல்லது. ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பாக ஒரு முறை குளித்துவிட்டு ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
ஆலயத்தில் இருக்கக்கூடிய கால பைரவரின் உயரத்திற்கு ஏற்ப எலுமிச்சம் பழத்தால் மாலை தயார் செய்து எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அடுத்ததாக பூசணிக்காய் தீபம் அல்லது தேங்காய் தீபம் இவற்றில் ஏதாவது ஒரு தீபத்தை ஏற்றி வைத்து முழு மனதோடு கால பைரவரை வலம் வர வேண்டும். காலபைரவருக்கு செவ்வரளி மலர்களை சாற்றி, சங்கல்பம் வைத்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் எது பிரச்சினையாக இருக்கிறதோ எது நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அது நடக்க வேண்டும் என்று கூறி சங்கல்பம் வைத்து அர்ச்சனை செய்யும் பொழுது காலபைரவரின் அருளால் அது விரைவிலேயே நடைபெறும். பிறகு அங்கேயே அமர்ந்து சொர்ண ஆகர்ஷண பைரவரின் அஷ்டகத்தை பாராயணம் செய்வது, காலபைரவரின் மூல மந்திரங்களை உச்சரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு முழு நிறைவோடு வீடு திரும்ப வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட கருப்பட்டி தீப வழிபாடு
அதிசக்தி வாய்ந்த தெய்வமாக திகழக்கூடிய கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி நாளில் நாம் இந்த முறையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய நம்முடைய காரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.