வழக்கமாக எப்பொழுதும் இட்லி, தோசையை தான் காலை உணவாக எடுத்துக் கொள்கின்றோம். அதிலும் சற்று மாறுபட்டு சமைத்தால் பொங்கல், சப்பாத்தி, பூரி மட்டுமே இருக்கும். இதை தவிர எவ்வளவு யோசித்தாலும் காலை உணவிற்கு வேறு என்ன செய்வது என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருக்கும். ஆனால் கோதுமை மாவு, முட்டை வைத்து செய்யக்கூடிய வித்தியாசமான காலை உணவை ஒருமுறை சமைத்து பாருங்கள். கடையில் வாங்கும் பீட்சா போன்ற சுவையில் இருக்கும். இதனை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், முட்டை – 3, கேரட் – 2, வெங்காயம் – 1, கரமசாலா – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் இரண்டு முட்டைகளை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேகவைத்த முட்டைகளை தோலுரித்து விட்டு வட்ட வடிவில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் இரண்டு கேரட்டுகளை தேங்காய் சீவலை பயன்படுத்தி நன்றாக துருவிக் கொள்ள வேண்டும்.

அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் கோதுமை மாவு, ஒரு முட்டை, கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு கால் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக எண்ணெயிலேயே வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு தட்டில் மாற்றி வைத்து கொள்ள வேண்டும். இந்த மசாலா அப்படியே இருக்கட்டும்.

பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த மாவில் பாதியை தோசைக் கல்லின் மீது ஊற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் செய்து வைத்துள்ள மசாலாவில் பாதியை பரவலாக தூவி விட வேண்டும். அதன்பின் இதற்குமேல் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை பரப்பி வைக்க வேண்டும்.
பிறகு மீதமுள்ள மசாலாவினை முட்டையின் மீது தூவி விட வேண்டும். இறுதியாக மீதமுள்ள கோதுமை மாவினை இவற்றின் மீது பரவலாக ஊற்றி விட வேண்டும். பின்னர் அடுப்பின் தீயை குறைத்து மூடி போட்டு 7 நிமிடங்கள் அப்படியே வேக விட வேண்டும். அதன் பின் மூடியைத் திறந்து தோசையைத் திருப்பிப் போட்டு அதே போல் ஐந்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோதுமை முட்டை பீட்ஸா தயாராகிவிட்டது.

நீங்களும் காலை உணவிற்காக ஒரு முறை இந்த கோதுமை முட்டை பீட்சாவை சமைத்துப் பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.