ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது இவ்வளவு சுலபமா? ஒருவாட்டி உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் பிசிபெலாபாத் என்று சொல்லப்படும் சாம்பார் சாதத்தை, நம்முடைய வீட்டிலும் சுவையாக, சுலபமாக செய்ய முடியும். எந்த விதமான மசாலா பொடியும் சேர்க்காமல், நம் கையாலேயே மசாலா பொருட்களை அரைத்து, கமகம வாசத்தோடு சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், இந்த சாம்பார் சாதம் செய்து கொடுத்துப் பாருங்கள்! நிறைய பாராட்டு கிடைக்கும்

rice

Step 1:
அரிசி – 1 கப் எடுத்துக்கொண்டால், துவரம்பருப்பு – 1/2 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியையும் பருப்பையும் மூன்று முறை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு 4 கப் அளவு தண்ணீர் ஊற்றி பருப்பும் அரிசியும் குழையும் அளவிற்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியையும் பருப்பையும் எதில் அளந்தீர்களோ, அதே கப்பில், தண்ணீர் அளக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குக்கரை, அடுப்பில் மிதமான தீயில் வைத்து நான்கிலிருந்து ஐந்து விசில் விடவேண்டும்.

- Advertisement -

Step 2:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு – 1 1/2 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், உளுந்து -1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கருவேப்பிலை – 1 கொத்து, இவைகளை சேர்த்து சிவக்கும் அளவிற்கு வறுக்க வேண்டும். இறுதியாக ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து 1 நிமிடங்கள் வதக்கி இந்த கலவை அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

thuvaram-paruppu

Step 3:
அடுத்தபடியாக பச்சைமிளகாய் 2, கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், நூல்கோல், இப்படி உங்களுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். தோலுரித்த 10 சின்ன வெங்காயம், பழுத்த தக்காளி 2 பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, புளிக்கரைசலை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

vegitables

Step 4:
அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, முதலில் பச்சை மிளகாயை போட வேண்டும். அடுத்தபடியாக மஞ்சள் தூள், பெருங்காயம், சேர்க்க வேண்டும் உடனடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியையும், வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளையும் சேர்த்து, எண்ணெயில் ஒரு முறை கிளறி விட்டால் போதும். வதக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

- Advertisement -

காய்கறிகள் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதோடு அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு காய்கறிகளை வேக வைத்து விடுங்கள். காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதம் போட்டு கிளறும் போது சரியாக இருக்கும்.

sambar-sadam1

காய்கறி வெந்ததும், கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்தபடியாக குக்கரில் விசில் வைத்து, வேக வைத்திருக்கும் பருப்பு சேர்த்த சாதத்தை காய்கறி கலவையோடு சேர்த்து, நன்றாக கிளறி விட்டு மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை வேக வையுங்கள். (இந்த இடத்தில், உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளுங்கள்.)

sambar-sadam2

Step 5:
மற்றொரு அடுப்பில் சிறிய தாளிப்பு கரண்டியை வைத்து, 2 ஸ்பூன் நெய்விட்டு, அதில் 5 முந்திரி பருப்பு, 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், 2 வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலையை, இரண்டு சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளித்து, சாம்பார் சாதத்தில் கொட்டி, கலந்து கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சூப்பரான கமகம வாசத்தோடு சாம்பார் சாதம் தயார்!

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருள் உங்க வீட்டில் இருந்தால் முதலில் அதை தூக்கி வீசி விடுங்கள். இல்லையென்றால் பிரச்சனை தான் வரும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -