மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்.)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் பார்வை 10ஆம் இடத்தில் இருந்து கொண்டு 2, 4, 6 ஆகிய இடங்களில் விழுகிறது. இவைகள் உங்களுடைய பலவீனத்தை குறிப்பதால் சுமாரான பலன்களையே கொடுக்கும். நீங்கள் கடினமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய காலமாக இனி வரும் காலங்கள் அமைய இருக்கிறது. எதிலும் ஆர்வமில்லாமல் செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனினும் சுயமுயற்சியால் நீங்கள் முன்னேற கூடிய வாய்ப்புகள் உருவாகும் எனவே கவலை கொள்ள தேவையில்லை.
உத்தியோகம் மற்றும் தொழில்:
உத்தியோகத்தை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உங்களின் எதிர்பார்ப்பை தவிர்த்து வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் பெரிய அளவில் சறுக்கல்கள் இல்லை என்றாலும் மந்த நிலை காணப்படும். இப்போதைக்கு புதிய தொழில் முயற்சிகள் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. புதிய முதலீடுகள், தெரியாத விஷயங்களில் ஒப்பந்தங்கள் செய்வது போன்றவற்றை செய்யாதீர்கள்.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும். ஏற்றமான சூழ்நிலையில் இருக்கும் போது ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது பொருளாதார சிக்கல்களை சமாளிக்க உதவியாக இருக்கும். திடீரென வரும் பணவரவை தக்க வைத்துக் கொள்வது நல்லது. கையில் பணம் இருக்கிறது என்று தாராளமாக செலவு செய்து விட்டால் பின்னர் வருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படும். வாங்கிய கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகும் என்பதால் கூடியவரை சிக்கனத்தை மேற்கொள்வது நன்மை தரும்.
குடும்ப வாழ்க்கை:
குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய சகோதர, சகோதரிகள் வழியே நிறைய மன சங்கடங்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் நமக்கென்று ஒரு நேரம் வரும் என்று அமைதியாக கடந்து செல்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே பிரிவு உண்டாகாமல் இருக்க உங்களுடைய முன்கோபத்தை நீங்கள் குறைத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். உங்களுடைய பலமே பலவீனமாக மாறக்கூடும். அன்பிற்கு உரியவர்களை அனுசரித்து செல்லுங்கள்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாகவே உங்களுடைய உடல் நலத்தில் நீங்கள் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை. ஆனால் இந்த குரு பெயர்ச்சிக்குப் பிறகு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் சற்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகளின் மீதும் கூடுதல் கவனமுடன் இருப்பது அவசியம்.
செய்ய வேண்டிய பரிகாரம்:
உங்கள் ராசிக்கு குரு பகவான் வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்தவரை மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வது சுபம் உண்டாக்கும்.
இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.