குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 கன்னி

guru-peyarchi kanni
- Advertisement -

சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். தடைப்பட்ட கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

- Advertisement -

kanni

குருபகவானின் பார்வை:

குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

- Advertisement -

குரு தனது 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், எதையும் பலமுறை திட்டமிட்டுச் செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதுப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணிச் சுமை குறையும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

- Advertisement -

உங்கள் ராசிக்கு 3 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலரால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும்.

உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், கணவன் – மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தாயாருடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியமும் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாகச் செல்வதால், முயற்சிகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சிலருக்கு தலைச்சுற்றல், தோலில் அலர்ஜி வந்து செல்லும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் வக்கிரகதியில் செல்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கூடிவரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துகொண்டு முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள். கமிஷன், துரித உணவகம், ஸ்டேஷனரி, கட்டுமானம் வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இனி உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

guru

மாணவ மாணவிகளே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளைக் கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் வெளியாகி புகழ் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், நினைத்ததை நிறைவேற்றும் வல்லமையைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: பெளர்ணமி திதியில் தக்கோலம் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீஜலநாதீஸ்வரர், ஸ்ரீநர்த்தன தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரையும் வழிபடுங்கள்; வளம் பெருகும்.

- Advertisement -