குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 விருச்சிகம்

guru-peyarchi
- Advertisement -

மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!

உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால், சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் துரத்தும். கணவன் – மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு காண முயற்சிக்கவும். பணப் பற்றாக்குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

- Advertisement -

virichigam

குருபகவானின் பார்வை

குருபகவான் தன் 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை குருபகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புதுப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும்.

- Advertisement -

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும், 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வ தால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

உங்களின் ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

guru

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். போட்டிகளைச் சமாளிக்க புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவித்தும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். மூத்த அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உங்கள் மீது பழி சுமத்துவார்கள். சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும்.

மாணவ மாணவிகளே! படிப்பில் கவனம் தேவை. அலட்சியம் காட்டினால் உங்கள் நண்பர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள். தெரியாத விஷயங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். ஆய்வகப் பரிசோதனைகளில் கவனமாக இருக்கவும்.
guru

கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.

இந்த குரு பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.

பரிகாரம்: சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

- Advertisement -