இட்லி, தோசை, வெண்பொங்கலுக்கு மட்டுமல்ல சாதத்துக்கும் அசத்தலாக இருக்கும் இந்த சிறு பருப்பு சாம்பாரை எளிதாக ஒருமுறை இப்படி வச்சு பாருங்க!

siru-paruppu-sambar1
- Advertisement -

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள காய்கறிகள் இல்லாத சாம்பார் செய்யும் பொழுது பெரும்பாலும் சிறு பருப்பு வைத்து சாம்பார் செய்வது வழக்கம். இட்லி, தோசை, பொங்கல் எல்லாவற்றுக்கும் அசத்தலாக இருக்கும் இந்த சிறு பருப்பு சாம்பார் சாதத்துக்கு ஊற்றிக் கொள்ள அவ்வளவு அருமையாக இருக்கும். என்னடா இன்று சமையல் செய்வது? என்று யோசிக்கும் பொழுது பத்து நிமிடத்தில் சுவையாக செய்யக்கூடிய இந்த சிறு பருப்பு சாம்பாரை எளிதாக எப்படி வைக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சிறு பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
சிறு பருப்பு – 100 கிராம், பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

சிறுபருப்பு சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் அளவிற்கு சிறு பருப்பை நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். பருப்பு நன்கு ஊறியதும் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் ஊறிய பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு குறைந்த தீயில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். ஐந்து நிமிடத்தில் பாசிப் பருப்பு நன்கு வெந்து குழைந்து விடும். அதை அப்படியே வைத்து விட்டு மற்றொரு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடி பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போக லேசாக வதங்கியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். தக்காளி வதங்கிய பிறகு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். அடிப்பிடிக்காமல் மசாலா வாசனை போக நன்கு கலந்து விட்ட பின்பு, நீங்கள் வேக வைத்துள்ள சிறுபருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். சாம்பார் கெட்டியான பதத்திற்கு நன்கு கொதித்ததும் நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட இட்லி, தோசை, பொங்கல், சாதத்துடன் பரிமாற வேண்டியது தான்.

ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த சிறு பருப்பு சாம்பாரை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள். இந்த சாம்பார் செய்வதற்கு 10 நிமிடம் கூட ஆகாது. ரொம்பவே சுலபமாக இருக்கக் கூடிய இந்த சாம்பார் சுவையானதாகவும், ஆரோக்கியம் நிறைந்ததும் ஆகும். எனவே அடிக்கடி துவரம் பருப்பு சாம்பார் செய்து போரடித்து போனவர்கள், இது போல் சிறுபருப்பு சாம்பாரையும் செய்து பாருங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -