கல்யாண வீட்டு ரசம் ரெசிபி

rasam-sadam
- Advertisement -

கல்யாண வீட்டுக்கு போனா இந்த ரசத்தில் இருக்கும் ருசியை, வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியாது. லேசான பருப்பு வாசத்துடன் கமகமக்கும் ரசம் இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று ஏங்குவோம். கேட்டு கேட்டு சாதத்தில் ஊற்றி சாப்பிடுவோம். இதே போல ரசம் தினமும் வீட்டில் கிடைக்காதா என்று யோசிப்பவர்களும் உண்டு. அதற்காகத்தான் கல்யாண வீட்டு ரசம் ரெசிபியை அப்படியே இந்த பதிவில் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்திருக்கின்றோம். தேவைப்படுபவர்கள் படித்து பலன் பெறவும்.

ரசப்பொடி செய்முறை
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 4, வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் சூடான கடாயில் போட்டு வாசம் வரும் வரை லேசாக வருத்து அடுப்பை அணைத்து, ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து வேக வைத்த துவரம் பருப்பு 1/4 கப் நமக்கு தேவை. குக்கரில் துவரம் பருப்பை போட்டு மஞ்சள் தூள் போட்டு, கொஞ்சமாக எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே இருக்கட்டும்.

சின்ன எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரசம் செய்முறை

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், கிள்ளிய வர மிளகாய் – 4, இடித்த பூண்டு பல் – 5, கருவேப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், போட்டு தாளிக்கவும். அடுத்து பழுத்த 2 தக்காளிகளை இதில் போட்டு வதக்குங்கள்.

- Advertisement -

தக்காளி லேசாக வதங்கி வந்ததும் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை இதில் ஊற்றி, 1 பெரிய சொம்பு அளவு தண்ணீரையும் ஊற்றி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு, இதை 5 லிருந்து 8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். அதன் பிறகு வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை இதில் ஊற்றவும்.

அடுத்து வெல்லம் – 1/2 ஸ்பூன், அரைத்து வைத்திருக்கும் ரசப்பொடியை போட்டு 3 நிமிடம் மிதமான தீயில் கொதி வந்தவுடன் மல்லித்தழையை தூவி இறக்கினால், மண மணக்கும் கல்யாண வீட்டு ரசம் தயார். ஒருமுறை முயற்சி செய்து தான் பாருங்களேன். நிச்சயம் இந்த ரசம் கல்யாண வீட்டு ரசத்தை விட ருசியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: பூண்டு சாதம் செய்முறை

சுடச்சுட குழைந்து இருக்கும் சாதத்தில் இந்த ரசத்தை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் இதுதான் அமிர்தம். ரசம் பிரியர்களுக்கும், ரசம் வைத்தால் விஷம் போல இருக்கும் என்று சொல்லும் இல்லத்தரசிகளுக்கும் இந்த ரசம் ரெசிபி.

- Advertisement -