நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்கள் ஏற்படுகிறது என்றால் அதற்கு நவகிரகங்களே காரணமாக திகழ்கின்றன. முந்தைய ஜென்மத்தில் நாம் செய்த பாவ வினைகளின் அடிப்படையில் தான் இந்த ஜென்மத்தில் நம்முடைய வாழ்க்கையில் நவகிரகங்கள் பாதிப்பையும் நன்மையும் செய்கின்றன. அப்படி செய்யக்கூடிய இந்த நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகங்களாக திகழ்ந்தவர்கள் தான் செவ்வாய் பகவான், குரு பகவான் மற்றும் சனி பகவான். இவர்களின் அருள் யார் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைக்கிறதோ அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் மட்டுமே ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படி இவர்களின் அருளை பெறுவதற்கும் நன்மைகள் உண்டாகவும் சஷ்டி தினத்தில் செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இன்று முருகப்பெருமானுக்கு உகந்த திதியான சஷ்டி திதி. இந்த தினத்தில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. விரதம் இருக்க இயலாதவர்கள் கூட முருகப்பெருமானை நினைத்து முருகப்பெருமானுக்குரிய பாடலான கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தாலே முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் என்றும் அப்படி கேட்கக்கூடிய அருளால் பல நன்மைகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு சேர்த்து நாம் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக கடன் பிரச்சினைக்கு காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். மேலும் சொந்த வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்றால் அதை நிறைவேற்றுவதற்கும் செவ்வாய் பகவானின் அருள் என்பது வேண்டும். செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு உகந்த திதியான சஷ்டி திதி அன்று செவ்வாய் பகவான் அருளை நம்மால் எளிதில் பெற முடியும். அப்படி எளிதில் பெறுவதற்கு செவ்வாய் பகவானுக்குரிய துவரம் பருப்பு என்பது உதவி செய்யும்.
இதேபோல் நம்முடைய வாழ்க்கையில் மங்களங்கள் அனைத்தையும் பெற்று நலமுடன் நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கு குருபகவானின் அருள் என்பது வேண்டும். அவரின் அருளை விட அவரின் பார்வைக்கு சக்தி அதிகம் என்றே கூறப்படுகிறது. அவர் பார்த்தாலே நமக்கு அருள் கிடைத்துவிடும் அல்லவா? அதனால் அவரின் அருளை பெற வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் குருபகவானுக்குரிய நிறமான மஞ்சள் நிறத்தை நாம் இந்த பரிகாரத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
மூன்றாவதாக நம்முடைய கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த கர்ம வினைகளை கணக்கிட கூடிய சனிபகவானின் அருளை பெற வேண்டும். இன்று சனிக்கிழமை என்பதால் சனி பகவானுக்குரிய அருளை நம்மால் எளிதிலேயே பெற்றுவிட முடியும். அதோடு சேர்த்து சனிபகவானுக்குரிய தானியமான எள்ளை நாம் பரிகாரத்தில் பயன்படுத்தும் போது அதனுடைய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இன்றைய தினத்தில் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக குருபகவானுக்குரிய மஞ்சள் நிறத்திலான துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் செவ்வாய் பகவானுக்குரிய துவரம் பருப்பை ஒரு கைப்பிடி அளவு வைத்துக் கொள்ளுங்கள். அதோடு சனிபகவானுக்குரிய தானியமான எள்ளையும் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூட்டையாக கட்டி நம்முடைய தலையணைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்.
இவ்வாறு படுத்தவுடன் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நினைத்து கொள்ள வேண்டும். இந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்றும் என்னென்ன நன்மைகள் எல்லாம் நடந்தால் நாம் சந்தோஷமாக இருப்போமோ அந்த நன்மைகள் அனைத்தையுமே நினைத்து பார்க்க வேண்டும். இப்படி நினைத்து பார்த்துவிட்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து இந்த மூட்டையில் இருக்கக்கூடிய துவரம் பருப்பையும் எள்ளையும் பறவைகளுக்கோ மீன்களுக்கோ தானமாக போட்டு விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் குரு பகவான், செவ்வாய் பகவான் மற்றும் சனி பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டு நமக்கு நன்மைகளை மட்டுமே தருவார்கள்.
இதையும் படிக்கலாமே ஆடி கடைசி ஞாயிறு செய்ய வேண்டிய வழிபாடு
இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை முழு மனதோடு இன்று இரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய கர்ம வினைகளும் கடன்களும் தீர்ந்து, மங்களங்கள் உண்டாகும். முழு மனதுடன் செய்து முழு பலனையும் அடைவோம்.