கொடி காய்கள் வளர்ப்பவர்கள் பிஞ்சு உதிராமல் இருக்கவும், காய்கள் வேகமாக வளரவும் அதிக செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஒரு உரம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

kodi-plants-uram
- Advertisement -

கொடிகளில் காய்க்க கூடிய காய்கள் வளர்ப்பவர்கள் அதற்கு கூடுதலாக கவனம் செலுத்தி பராமரிப்பு செய்ய வேண்டும். பிஞ்சுகள் முளைத்தாலும் அது உதிர்ந்து விடுவது ஊட்டச்சத்து குறைபாட்டை குறிக்கிறது. மாடி தோட்டம், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள், கொடிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உரம் இது! பத்து பைசா செலவில்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக செய்யக்கூடிய இந்த உரத்தை எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

கொடிக்காய்களுக்கு அதிக அளவு பொட்டாசியம் சத்து, மெக்னீசியம் சத்து தேவைப்படுகிறது. இந்த சத்துக்களை சரியான விகிதத்தில் கொடுக்கும் பொழுது பிஞ்சுகள் உதிராமல் இருக்கும். கொடிகளில் காய்க்க கூடிய பிஞ்சுகள் உதிராமல் இருப்பதற்கு பொட்டாசியம் சத்துள்ள உரம் கண்டிப்பாக தேவை. உங்கள் வீட்டுக் கொடிகளில் பூக்கும் ஒவ்வொரு மலரும் உதிராமல் காயாகி நன்கு காய்க்க துவங்குவதற்கு தேவையான ஒரு உரம் இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள தேங்காய் மற்றும் நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் அழுகிய தேங்காயாக இருந்தாலும் பரவாயில்லை, வீணாக போகும் தேங்காயில் இருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை. அரை மூடி தேங்காய்க்கு, மூன்று நெல்லிக்கனிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் என்றால் சிறிய நெல்லிக்காய் அல்ல, பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் இருக்கும் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக சதைப் பற்றை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். எந்த ஒரு உரத்தையும் மூன்று நாட்கள் அப்படியே விட்டு, அதில் நுண்ணுயிரிகளை பெருக்க செய்ய வேண்டும். அப்பொழுது தான் அது மண்ணுக்கு ஊட்டச் சத்தைக் கொடுக்கும். நுண்ணுயிரிகள் பெருக்கும் பொழுது செடிகளின் மண்ணிற்கு வளம் சேரும்.

- Advertisement -

வேகமாக காய்கள் வளரவும், ஆரோக்கியமாக வளரவும் கார்பன் சத்து தேவை. இதற்கு ஒரு கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு நெருப்பில் காட்டி சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். சுட்டு எடுத்த பின்பு அதன் தோல் பகுதியில் கார்பன் சத்து நிறைந்து இருக்கும். இந்த தோல் பகுதியை மட்டும் தனியாக நீக்கி அரை லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். இதையும் மூன்று நாட்கள் அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்களுக்கு பிறகு இவை அனைத்தும் ஒன்றாக கலந்து அரை லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் இதை கொஞ்சம் கூட திப்பிகள் இல்லாமல், வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டுவதற்கு கடைகளில் கொடுக்கும் துணிப்பையை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்கு வடிகட்டிய பின்பு இந்த தண்ணீரை ஒரு டம்ளர் அளவிற்கு ஒவ்வொரு செடிகளுக்கும் கொடுத்து வர வேண்டும். கொடி காய்களில் முதலில் எப்பொழுதும் ஆண் பூக்கள் பூக்கும். அதன் பிறகு பெண் பூக்கள் பூத்து, அது காயாக மாறும். உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் கொடிகளில் ஒரு பூ கூட உதிராமல் காயாக மாறுவதற்கு இந்த உரத்தை கொடுக்க வேண்டும். முதலில் செடிக்கு தேவையான அளவிற்கு சாதாரண தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

தண்ணீர் முழுவதும் மண் கலவை உரிந்து, தேவையற்ற தண்ணீரை நீங்கள் தொட்டியில் போட்ட துளையின் வழியாக வெளியேறிவிடும். அதன் பிறகு இறுதியாக இந்த உரத்தை கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் உரத்தில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் மண் கலவையிலும், கொடியின் வேருக்கும் கிடைக்கும். ஆண் பூக்கள் பூத்த பிறகு, இந்த உரத்தை சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் போன்றவற்றிற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொடுங்கள். உங்கள் வீட்டு கொடி காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.

- Advertisement -