நெத்திலி கருவாடு தொக்கு இப்படித் தான் சுத்தம் செய்யணுமா? ருசியான நெத்திலி கருவாடு தொக்கு சுலபமாக வீட்டிலேயே வைப்பது எப்படி?

nethili-thokku
- Advertisement -

ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு நெத்திலி கருவாடு என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்வது முதல் ருசியாக தொக்கு வைப்பது வரை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நெத்திலி கருவாடு சுத்தம் செய்யும் முறை:
முதலில் நெத்திலி கருவாட்டை சமைக்கும் முன்பு அதை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். தலைப்பகுதியினுள் கருப்பு நிறத்தில் இருக்கும் கசடுகளை முதலில் அகற்றிவிட வேண்டும். இதனால் தலை பகுதியோடு சேர்த்து நீங்கள் பிய்த்தால் உள்ளிருக்கும் அந்த கருப்பு பகுதியும் சேர்த்து வெளியில் வர வேண்டும். பின்னர் வால் பகுதியையும் லேசாக வெட்டி எடுத்து விடுங்கள். இதே போல எல்லா கருவாட்டையும் ஒவ்வொன்றாக எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் பத்து நிமிடம் நன்கு கொதித்த தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள்.

- Advertisement -

பின்னர் அதை இலேசாக அலசி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சாதாரண தண்ணீரில் ஒரு முறை நன்கு அலசுங்கள். அலசும் பொழுது கைகள் கொண்டு மீதமிருக்கும் கசடுகளை கைகளால் சுலபமாக எடுத்துவிடலாம். பின்னர் மேல் புறத்திலும் லேசாக கைகளை வைத்து தேயுங்கள். இதனால் மண், அழுக்குகள் போன்றவை இருந்தால் அவை தண்ணீரோடு நீங்கிவிடும். இது போல நன்கு சுத்தம் செய்த பின்பு இறுதியாக ஒருமுறை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அலசி பின்னர் தண்ணீரை எல்லாம் வடிகட்டி ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நெத்திலி கருவாடு தொக்கு செய்வது எப்படி?
முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயம் இருந்தால் ஒரு 200 கிராம் அளவிற்கு பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம் பரவாயில்லை.

- Advertisement -

பின்னர் இதனுடன் காரத்திற்கு நான்கிலிருந்து ஐந்து பச்சை மிளகாய்களை இரண்டாக கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு வதங்கிய பின்பு 3 தக்காளி பழங்களை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். தக்காளி, வெங்காயம் நன்கு மசிய வதங்க வேண்டும், அதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்குங்கள். இவை வதங்கி வரும் பொழுது நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் அளவிற்கு தனி மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் நன்கு வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நெத்திலி கருவாடு சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி ஒரு முறை பிரட்டி எடுத்தால் மணக்க மணக்க நெத்திலி கருவாடு தொக்கு தயார்! இது எந்த வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும்.

- Advertisement -